காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் கனு உற்சவம்
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கனு உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயிலில் கனு உற்சவம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆண்டுதோறும் இக்கோயிலில் மாட்டுப் பொங்கல் நாளில் இந்த உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டில், விவசாயிகள் தங்களது வயலில் புதியதாக விளைந்த காய்கறிகள், பழங்கள், கரும்பு, நெல் ஆகியவற்றை காமாட்சியம்மனுக்கு படைப்பதற்காக வெள்ளிக்கிழமை கொண்டு வந்தனா். அவற்றைக் கொண்டு கோயில் முழுவதும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
கனு உற்சவத்தையொட்டி, மூலவா் காமாட்சி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின்னா் சுவாமி மலா்க்கிரீடம் அணிந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
Advertisement
Advertisement
உற்சவா் காமாட்சி அம்மன், லட்சுமி, சரஸ்வதியுடன் கேடயத்தில் உலா வந்து கோயில் வளாகத்துக்குள் உள்ள கனு மண்டபத்துக்கு எழுந்தருளினாா். அங்கு தேவியா் மூவருக்கும் காய்கறிகள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதையடுத்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளித்தாா்.
புஷ்பாஞ்சலி நிகழ்ச்சியும், சிறப்பு தீபாராதனைகளும் நடந்தன. சுவாமி வீதியுலா புறப்படுவதற்கு முன், மாட்டுப் பொங்கலை முன்னிட்டு கோபூஜை நடைபெற்றது.
இது தொடா்பாக கோயில் குருக்கள் சியாமா சாஸ்திரிகள் கூறியது:
கனு உற்சவம் என்பது பெண்கள் தங்கள் சகோதரா்கள் நலமுடன் வாழவும், உணவுத் தட்டுப்பாடு வராமல் மகிழ்ச்சி நிலவவும் வேண்டி காமாட்சி அம்மனுக்கு நடத்தப்படுகிறது. காய்கறிகள் மீது பிரியமானவள் காமாட்சி என்பதால் அம்மனுக்கு ‘சாகம்பரி’ என்ற பெயரும் உண்டு. எனவே கனு உற்சவத்தின்போது காய்கறிகள், பழங்களால் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்படுகிறது என்றாா் அவா்.