சிகாகோவில் சுவாமிஜியின் பிரமிப்பு
சிகாகோ அனுபவம் அவருக்கு முற்றிலும் புதியது. ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் ஒருகணம் திகைக்கத் தான் செய்தார்.
சிகாகோ அனுபவம் அவருக்கு முற்றிலும் புதியது. ரயில் நிலையத்தில் இறங்கிய அவர் ஒருகணம் திகைக்கத் தான் செய்தார். எங்கே போவதென்று தெரியவில்லை. வேட்டியும் தலைப்பாகையுமாக அவருடைய உடை வேறு அந்த அன்னிய நாட்டில் வேடிக்கையாகத் தோன்றியது.
சிறுவர்கள் ஏதோ வினோத மனிதனைப் பார்ப்பதுபோல் அவரது பின்னால் சென்றனர். கூக்குரல் எழுப்பினர் மற்றவர்களும் அவரை ஏதோ வேடிக்கை பார்ப்பவர்கள் போல் பார்த்தார்களே தவிர யாரும் அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நடப்போ அன்போ காட்டி, நேசக்கரம் நீட்டி அவரை ஏற்றுக் கொள்வதற்கு அந்த அன்னிய நாட்டில் யாரும் இருப்பதாகத் தெரியவில்லை.
சுவாமிஜிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. கடைசியில் ஓர் ஓட்டலில் தங்குவதென்று முடிவு செய்தார் அதற்காக ஓர் ஓட்டல் ஏஜன்டை அணுகினார். தனது ஓட்டலே மிகச் சிறந்தது என்று சுவாமிஜியிடம் கூறினான் அந்த ஏஜன்ட். எல்லாம் புதிராகத் தோன்றுகின்ற அந்தப் புதில் உலகில் நல்ல ஓட்டலிலேயே தங்கி விடலாம் என்று அவனுடன் சென்றார் சுவாமிஜி. தமது பெட்டிகளையும் மூட்டை முடிச்சையும் அறையில் வைத்துவிட்டு அப்பாடா என்று அமர்ந்தார். எல்லா பிரச்சினைகளையும் கவலைகளையும் ஒதுக்கி வைத்துவிட்டு மனத்தை அமைதியாக்க முயன்றார்.
Advertisement
மறுநாள் கண்காட்சியைப் பார்க்கச் சென்றார். அங்கே அவர் கண்ட அனைத்தும் புதியவையாகவும் புதுடையுடனும் இருந்தன. தொடர்ந்து பன்னிரு நாட்கள் சென்று எந்திரங்கள், கலைப் பொருட்கள் விஞ்ஞான அதிசயங்கள் போன்ற பல்வேறு பகுதிகளைப் பார்வையிட்டார். நீராவி மற்றும் மின்சாரம் போன்றவற்றின் துணையுடன் இயக்கப்படுகின்ற எந்திரங்களை சுவாமிஜி அங்கேதான் முதன்முதலாகக் கண்டார். மனித மனம் நிகழ்த்தியுள்ள அதிசயங்களையெல்லாம் கண்டு பிரமித்தார். சிகாகோவில் சுவாமிஜியின் பிரமிப்பு