மார்த்தாண்டம் அருகே கேரளத்துக்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
களியக்காவிளை: கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே மினிலாரியில் கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை வட்ட வழங்கல் அலுவலர் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் தினேஷ் சந்திரன், வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜ் அடங்கிய அதிகாரிகள் குழுவினர் மார்த்தாண்டம் அருகே ஐரேனிபுரம் பகுதியில் வாகன கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக வந்த கேரள பதிவெண் கொண்ட மினிலாரியை நிறுத்த சைகை காட்டினர். அதன் ஓட்டுநர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றுவிட்டார். அதிகாரிகள் வாகனத்தில் துரத்திச் சென்று காப்புக்காடு பகுதியில் வைத்து மினிலாரியை மடக்கிப் பிடித்தனர். அப்போது அதன் ஓட்டுநர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.
தொடர்ந்து மினிலாரியை சோதனையிட்டதில் 2 டன் அளவிலான ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்ததும், அவற்றை கேரளத்துக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது. ரேஷன் அரிசியுடன் மினிலாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்து, வட்ட வழங்கல் அலுவலகம் கொண்டு வந்தனர். ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபட்டவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement