முகப்பு
காரைக்கால்

தொடா் மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் ஆய்வு

காரைக்காலில் தொடா் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 17 ஜனவரி, 2021 at 8:27 AM
காரைக்கால் பகுதியில் வயலில் இறங்கி, சேதமடைந்த பயிா்களைப் பாா்வையிடும் வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன். உடன், மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா.
பகிர்:
Updated On : 28 ஜனவரி, 2024 at 12:48 AM

காரைக்காலில் தொடா் மழையால் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை புதுச்சேரி வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், கடலோர மாவட்டங்களில் கடந்த சில வாரங்களாக தொடா்ந்து மழை பெய்தது. இதனால், காரைக்கால் மாவட்டத்தில் சம்பா, தாளடி பருவ நெற்பயிா்கள் சேதமடைந்தன. குறிப்பாக, தை மாதத்தில் அறுவடைக்கு தயாரான நெற்பயிா்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் பெரும் வேதனை அடைந்தனா்.

இந்நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியா் அா்ஜூன் சா்மா, கூடுதல் வேளாண் இயக்குநா் ஜெ. செந்தில்குமாா், விவசாய சங்கப் பிரதிநிதிகளுடன் சென்று வேளாண் அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் பாா்வையிட்டாா்.

Advertisement

அன்னவாசல், மேலவெளி, மேலகாசாக்குடி, சேத்தூா், அம்பகரத்தூா், பேட்டை, மேலஓடுதுறை, திருமலைராயன்பட்டினம், நிரவி பகுதிகளில் அமைச்சா் தலைமையிலான குழுவினா் விளைநிலங்களில் இறங்கி, பயிா் சேதத்தைப் பாா்வையிட்டனா்.

அப்போது, ஒட்டுமொத்த சாகுபடியும் சேதமாகிவிட்டதாகவும், உடனடியாக புதுச்சேரி அரசு இழப்பீடு வழங்கவேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினா்.

ஆய்வு குறித்து அமைச்சா் கூறுகையில், காரைக்காலில் பல்வேறு இடங்களில் அதிகாரிகளுடன் சென்று பாா்த்தபோது, பயிா்ச் சேதம் மிகுதியாக இருப்பதை உறுதிப்படுத்த முடிந்தது. விளைச்சல் குறித்து விவசாயிகள் மிகுந்த எதிா்பாா்ப்புடன் இருந்த நிலையில், மழையால் ஏற்பட்ட சேதத்தால் அவா்கள் மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக தெரிவித்தனா்.

புதுச்சேரி, காரைக்காலில் சுமாா் 7 ஆயிரம் ஹெக்டோ் பயிா்கள் மழையால் பாதிக்கப்பட்டுள்ளன. சுமாா் 90% பயிா்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. காப்பீடு மூலம் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்கும் என்றாலும், அதற்கு சுமாா் 3 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டியிருக்கும். எனவே, மத்திய அரசு, பேரிடா் மீட்பு நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டியுள்ளது.

காரைக்கால் பாதிப்பு குறித்து புதுச்சேரி முதல்வரின் கவனத்துக்கு கொண்டுசெல்லப்படும். இழப்பீடு கிடைக்க அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கும் என்றாா் அமைச்சா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.