நீதிக் கதைகள்! அம்மாவின் புதிய யோசனை!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
ஒரு அம்மாவிற்கு இரண்டு மகன்கள். மூத்தவன் குடைகளைச் சரி செய்பவன். இளையவன், பனை மட்டையால் விசிறி செய்து விற்பவன். இரண்டு மகன்களும் தங்களுக்குக் கிடைக்கும் பணத்தை அம்மாவிடம்தான் கொடுப்பார்கள்.
மழைக்காலம் வரும்போது அம்மா,'மூத்தவனின் தொழில் நன்றாக நடக்கும். இந்த மழைக்காலம் முடியும் வரை வருமானத்திற்குக் குறைவிருக்காது!'' என்று நிம்மதியடைவார்கள். ஆனால் மழை பெய்யத் தொடங்கினால் அம்மாவுக்குக் கவலை வந்துவிடும்.
'என் இளைய மகனின் விசிறிகளை மழைக்காலத்தில் யாரும் வாங்க மாட்டார்களே!' என்று வருந்துவார்கள்.
Advertisement
அந்த அம்மா, மழைக்காலத்தில் இளைய மகனைக் குறித்தும், கோடை காலத்தில் மூத்த மகனைக் குறித்தும் கவலைப்படுவார்கள். ஒரே சமயத்தில் இரண்டு மகன்களைக் குறித்தும் மகிழ்ச்சி கொள்ளும் நாள் வராதா என்று அவர்களுக்கு ஏக்கமாக இருந்தது.
அம்மா அமைதியாக யோசித்து இதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார்கள்.
கோடைகாலத்தில் தங்கள் அம்மாவின் யோசனைப்படி மூத்தவனும் இளையவனும் சேர்ந்து விசிறி விற்றார்கள். தனி ஆளாக இருந்து விசிறி வியாபாரம் செய்ததைவிட இப்போது இரண்டு மடங்கு அதிகமாக லாபம் கிடைத்தது.
மழைக்காலத்தில் இருவரும் சேர்ந்தே குடைகளைச் சரி செய்தார்கள். அதிலும் அவர்களுக்கு முன்பைவிட அதிகமான வருமானம் கிடைத்தது. அந்த இளைஞர்கள் தங்கள் அம்மாவின் முடிவை எண்ணி மகிழ்ச்சியடைந்தார்கள்.
கொஞ்சம் ஆழ்ந்த முறையில் சிந்தித்துப் பார்த்தோமானால் எந்தப் பிரச்சினைக்கும் நாமே தீர்வு கண்டுபிடித்துவிட முடியும். நம்மால் முடிவெடுக்க முடியாதபோது, நமக்கு நெருக்கமானவர்களின் ஆலோசனையைத் தயக்கமின்றி கேட்டுப் பெறலாம்!