முகப்பு
குழந்தைகள் உலகம்

நீதிக் கதைகள்! அன்பு என்ற செல்வம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

பகிர்:

சுந்தரன் என்ற செல்வந்தன் ஒருவன் இருந்தான். அவன் பெரும் பேராசைக்காரன். யாருக்கும் எதையும் கொடுக்க மாட்டான். அப்படியே கொடுத்தாலும் அதை வட்டியும் முதலுமாக, பல மடங்கு கணக்குப் பண்ணி பறித்துக் கொள்வான். இதனால் அவனிடம் மேலும் செல்வம் குவிந்து வந்தது. ஆனால், அவன் மனம் ஆறுதல் அடையவில்லை. இன்னும் பல மடங்கு பெருக வேண்டும் என்று எண்ணினான்.

அப்போது அந்த ஊருக்கு ஒரு சாமியார் வந்தார். அவர் கேட்டதை எல்லாம் வரவழைத்துத் தரும் ஆற்றல் கொண்டவர் என்று அவன் கேள்விப்பட்டான். எனவே அவரைத் தேடி ஓடினான். அவரது காலில் விழுந்து எனது செல்வம் பல மடங்கு பெருக வேண்டும் என்று வேண்டினான்.

"சரி... உன் செல்வம் பெருகினால் எனக்கு என்ன தருவாய்?" என்று கேட்டார் சாமியார்.

Advertisement

Advertisement

"நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன் சாமி!" என்றான்.

"கேட்டதை எல்லாம் நான் தருவதாக கேள்விப்பட்டுத்தானே இங்கே வந்து என் காலில் விழுந்தாய். ஆனால் நீயே என்னிடம் நீங்கள் கேட்டதை எல்லாம் தருகிறேன் என்கிறாயே. நீ என்னைவிட பெரிய சாமியாரா?".... என்றார் சாமியார்.

"சாமி அப்படி நான் சொல்லவில்லை. உங்கள் கட்டளைக்கு கீழ்ப்படிகிறேன்!..."என்றான் சுந்தரன்.

"சரி உன்னிடம் இதுவரை இல்லாத செல்வத்தை நான் உனக்கு வரவழைத்துத் தருகிறேன்.

நான் சொல்வது போல் செய்யணும்..."

"சொல்லுங்கள், அடிபணிகிறேன்"

உனது ஊரில் எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்றார் சாமியார்.

"சுமார் 500 குடும்பங்கள்..."

"அவர்கள் உன் மேல் பிரியமாக இருக்கிறார்களா?"

"ஐயோ... ஒருவருக்குக் கூட என்னைப் பிடிப்பதில்லை. விலகிப் போய்விடுவார்கள்..."

"சரி... நாளை அந்த 500 குடும்பத்தினரையும் அழைத்து நீ விருந்து வைத்து உபசரிக்க வேண்டும். நாளை மறுநாள் என்னை வந்து பார்!..." என்று கூறி அனுப்பிவிட்டார் சாமியார். அவனும் ஊரில் உள்ள அனைவரையும் விருந்துக்கு அழைத்தான். முதலில் மறுத்தவர்கள் அவர் வலிந்து வலிந்து அழைக்கவே சம்மதித்தனர்.

மறுநாள் சுந்தரன் வைத்த விருந்தால் அந்த ஊரே திருவிழாக்கோலம் பூண்டது. அதைப்போல் உணவை அவர்கள் உண்டதே இல்லை. அனைவரும் அவனை வாழ்த்திவிட்டுச் சென்றனர்.

மறுநாள் சாமியாரை வந்து சந்தித்தான் சுந்தரன்.

"சாமி... செல்வம் எல்லாம் பன்மடங்கு பெருகிவிடும் அல்லவா?" என்றான்.

"அதுதான் ஏற்கெனவே பெருகிவிட்டதே!..." என்றார் சாமியார்.

"எப்படி சாமி சொல்கிறீர்கள், புதிதாக எந்த செல்வமும் எனக்கு வரவில்லையே..." என்றான்.

"சரி, நீ வீட்டுக்குப் போ. ஒரு வாரம் கழித்து வந்து சொல்!" என்றார்.

ஒரு வாரம் கழித்து வந்தான், சுந்தரன்.

"என்ன மாற்றம் கண்டாய்?" என்றார் சாமியார்.

"என் உள்ளத்தில் நிறைய மாற்றம் கண்டேன் சாமி. ஊர் மக்கள் அனைவரும் இப்போது என்னிடம் அன்போடு பேசுகிறார்கள்; வாழ்த்துகிறார்கள். அதைக் காணும்போதெல்லாம் என் மனம் மகிழ்ச்சியடைகிறது!..."

"இதுவரை உன்னிடம் அன்பு என்ற செல்வம் இல்லாமல் இருந்தது. இப்போது பல மடங்கு அதனை பெற்றுவிட்டாய். இனியும் இதுபோல் ஊர் மக்களிடம் நெருங்கிப் பழகு.

தேவை அறிந்து உதவு. ஊர் மக்கள் உன்னைக் கொண்டாடுவர். எப்போதும் உனக்குத் துணை நிற்பர்! என்றார் சாமியார்.

"என் ஞானக் கண்ணைத் திறந்து விட்டீர்கள்!" எனக் கூறி சாமியாரை வணங்கிவிட்டு விட்டுக்கு வந்தான்.

அன்றிலிருந்து அவர் தான, தர்மங்களில் சிறந்து விளங்கினார்.

summary

A moral story that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments