முகப்பு
குழந்தைகள் உலகம்

நீதிக் கதைகள்! கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம்!

குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.

Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:55 PM
பகிர்:
Updated On : 20 ஏப்ரல், 2026 at 12:46 PM

சந்திரன் மிகவும் ஒல்லியாக இருப்பான். பெற்றோர் திருமணம் செய்துகொள்ளும்படி அவனை வற்புறுத்தினார்கள். சந்திரன் ஒரு நிபந்தனையின் பேரில் சம்மதித்தான். மனைவியாக வருகிற பெண்ணும் அவனைப்போலவே ஒல்லியாக இருக்கவேண்டும் என்பதுதான் அந்த நிபந்தனை. ஏனெனில் அப்போதுதான் தான் ஒல்லியாக இருப்பதை அந்தப் பெண் கேலி செய்ய மாட்டாள் என்று நினைத்தான்.

பெற்றோரும் அவனுக்கு, மிகவும் ஒல்லியான பெண்ணையே பார்த்துத் திருமணம் செய்து வைத்தார்கள். அதன் பிறகு மக்கள் இந்தக் கணவன் மனைவியைப் பார்த்து "உலக்கைக்கேற்ற ஒட்டடைக் குச்சி' என்று கேலி செய்யத் தொடங்கினார்கள். இதைக் கேட்டுச் சந்திரனும், அவன் மனைவியும் வருந்தினார்கள்.

இவர்களின் துயரத்தைப் பார்த்து இரக்கம் கொண்ட தேவதையொன்று சந்திரனின் கனவில் வந்து சொன்னது:

Advertisement

"உனக்கு மூன்று வரங்கள் தருகிறேன். உன் மூன்று விருப்பங்களை நீ நிறைவேற்றிக்கொள்ளலாம்!"

விழித்தெழுந்த சந்திரன் அப்போதே தன் மனைவியிடம் விவரத்தைச் சொன்னான். மனைவி, "நாம் மிகவும் ஒல்லியாக இருப்பதால் எல்லோரும் நம்மைக் கேலி செய்கிறார்கள். எனவே முதலில் நாம் நம் உடலைப் பருமனாக்க வரம் கேட்போம்."என்றாள். சந்திரன் பிரார்த்தனை செய்தான்: "தேவதையே நாங்கள் இருவரும் குண்டாக வேண்டும்!"

அடுத்த நொடியே சந்திரனும் அவன் மனைவியும் மிகவும் குண்டாகிவிட்டார்கள். இரண்டு குன்றுகள்போல. அவர்களால் தாங்கள் இருந்த இடத்தை விட்டு நகரக்கூட முடியவில்லை. சந்திரன் இதை எதிர்பார்க்கவே இல்லை. அவன் பேரதிர்ச்சிக்கு ஆளாகி அப்படியே நின்றான். அவன் மனைவியோ தன் பருத்த உடலைப் பார்த்து பயந்து கத்திக்கூப்பாடுபோடத் தொடங்கினாள்.

சந்திரன் வருத்தத்துடன் அடுத்த வரத்தைப் பயன்படுத்தினான்: "தேவதையே எங்கள் பருமன் குறைய வேண்டும்!"

சொல்லி முடித்த அடுத்த கணம் அவர்கள் இருவரும் மிகமிகவும் ஒல்லியாக ஆனார்கள். முன்பு இருந்ததைவிடவும் மெலிந்துபோனார்கள். காற்றில் அவர்களின் உடல்கள் ஆடின. பறந்துவிடாமல் இருப்பதற்காக கதவைப் பிடித்துக்கொண்டு நின்றார்கள் தம்பதியர். மனைவி கணவனைத் திட்டினாள்:

"இனி நாம் எப்படி வெளியே போக முடியும்., மக்கள் முன்பைவிட அதிகமாக நம்மைக் கேலி செய்வார்களே! சாதாரண காற்றையே நம்மால் தாங்க முடியவில்லையே, வெளியே பெரிய காற்றடித்தால் நாம் பறந்து காணாமல் போய்விடுவோம். நாம் இருவரும் முன்பு இருந்ததைப்போல ஆகிவிட்டால் போதும்."

அவள் சொன்னது சரி என்று தோன்றியது சந்திரனுக்கு. அவன் பிரார்த்தித்தான்: "தேவதையே நாங்கள் இருவரும் முன்பு இருந்ததைப்போலவே ஆகிவிட்டால் போதும்."

அப்போதே சந்திரனும் அவன் மனைவியும் முன்பு இருந்ததைப்போல ஆகிவிட்டார்கள்.

உடற்குறைபாடுகளைக் குறையாக எண்ணி வருந்துவது அறிவீனம். மனிதனை மேம்படுத்துவது ஒன்றே ஒன்றுதான். அவனது நல்ல எண்ணமே அது! அதைப்போல, நமக்குக் கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதிலும் நாம் மிகவும் கவனமா இருக்கவேண்டும். இல்லையென்றால் ஏமாற்றமே மிஞ்சும்.

summary

A moral story that children should know

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.