நீதிக் கதைகள்! ஒரு விடைக்கு ஒரு பழம்!
குழந்தைகள் தெரிந்துகொள்ள வேண்டிய நீதிக் கதை.
கதிரேசன் ரொம்ப புத்திசாலியான மனிதர். துறுதுறுப்பானவர். யோசனைகள் சொல்வதில் வல்லவர். அதனால் ஊரிலுள்ளோர் அவரிடம் அணுகி ஆலோசனைகள் கேட்பர்.
அதே ஊரில் பச்சையப்பன் என்று ஒரு மனிதன் இருந்தான். அவன் யாரைப்பார்த்தாலும் ஏதாவது கேள்வி கேட்பான். இது அவனுக்கு வழக்கமாகிவிட்டது. அவனது கேள்விகளுக்கு ஊரிலுள்ளோர் பதில் சொல்ல முடியவில்லை. அதனால் அவர்கள் கதிரேசனைப் பார்த்துக் கேள்விகளைக் கேட்டால் அவர் பதில் சொல்வார் என்று பச்சையப்பனிடம் சொன்னார்கள்.
பச்சையப்பனும் கதிரேசனைச் சந்திக்கச் சென்றார். தன்னிடம் நிறைய கேள்விகள் இருப்பதாகவும் கதிரேசனிடம் அதற்கு பதில் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார் பச்சையப்பன். பச்சையப்பனின் பையில் ஆரஞ்சுப் பழங்கள் இருப்பதைக் கவனித்தார் கதிரேசன்!
Advertisement
கதிரேசன் பச்சையப்பனிடம், "ஒரு கேள்விக்கு ஒரு ஆரஞ்சுப் பழம் தரவேண்டும் சம்மதமானால் நான் பதில் சொல்கிறேன்!...." என்றார். பச்சையப்பனும் சம்மதித்தார்.
பிறகு ஒவ்வொரு கேள்வியாகக் கேட்டுக்கொண்டே வந்தார் பச்சையப்பன். கதிரேசனும் சளைக்காமல் பதில் சொன்னார். ஒவ்வொரு பதிலுக்கும் ஒரு ஆரஞ்சுப் பழத்தை வாங்கித் தின்றார். இப்படியாக எல்லாப் பழங்களும் தீர்ந்தன. பச்சையப்பனுக்கு ஆச்சரியாமாக இருந்தது!
"ரொம்ப வியப்பா இருக்குதுங்க,...... எப்படி இத்தனை ஆரஞ்சுப் பழங்களை நீங்கள் தின்றீர்கள்?...." என்றார்.
"உங்களிடம் வேறு பழங்கள் இல்லாததால் என்னால் பதில் சொல்ல முடியாது!..." என்றார் கதிரேசன்.
கதிரேசனின் கிண்டலை உணர்ந்த பச்சையப்பன் அன்று முதல் அனாவசியமாக யாரையும் கேள்வி கேட்டுத் துளைப்பதில்லை!