முகப்பு
தற்போதைய செய்திகள்

3 பெண்களை அறையில் அடைத்து கொடுமை:தனியார் வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர், மகன் கைது

நாகர்கோவில் கோட்டாறு பர்வதவர்த்தினி தெருவில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வெளிமாவட்டங்களிலிருந்து ஆள்களைத் தேர்வு செய்து வீட்டு வேலை, நோயாளிகளைக் கவனித்தல் போன்ற வேலைகளுக்கு

Updated On : 11 மார்ச், 2013 at 8:45 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

நாகர்கோவிலில் வேலை கேட்டு வந்த 3 பெண்கள் அறையில் அடைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டதாக எழுந்த புகாரின்பேரில், தனியார் வேலைவாய்ப்பு நிறுவன உரிமையாளர் மற்றும் அவரது மகனை போலீஸார் கைது செய்தனர்.

நாகர்கோவில் கோட்டாறு பர்வதவர்த்தினி தெருவில் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் வெளிமாவட்டங்களிலிருந்து ஆள்களைத் தேர்வு செய்து வீட்டு வேலை, நோயாளிகளைக் கவனித்தல் போன்ற வேலைகளுக்கு அனுப்பி வந்தது.இந்நிலையில், கோட்டாறு காவல் நிலையத்தை ஒருவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு, இந்தத் தனியார் வேலைவாய்ப்பு நிறுவனத்தில் 3 பெண்கள் அறையில் அடைத்துவைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுவதாகத் தகவல் தெரிவித்தார். இதையடுத்து, இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி, சப்-இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த் மற்றும் போலீஸார் அந்த வேலைவாய்ப்பு நிறுவனத்துக்குச் சென்றனர்.

அங்கு ஓர் அறையில் மூன்று பெண்கள் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களை போலீஸார் மீட்டு விசாரித்ததில், அவர்கள் அரியலூர் புதிய மார்க்கெட் தெருவைச்  சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ராஜாமணி (39), கரூர் மாவட்டம், குளித்தலை  மஞ்சள்குழிபட்டியைச் சேர்ந்த சின்னத்துரை மனைவி காளியம்மாள் (45), மதுரை  பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த செல்வராஜ் மனைவி செண்பகவல்லி (53) என்பது  தெரியவந்தது.

Advertisement

இந்நிறுவனத்தின் அறிவிப்பைத் தொடர்ந்து கடந்த சனிக்கிழமை இவர்கள் நாகர்கோவில் வந்துள்ளனர். வீட்டு வேலைக்கு இவர்களைத் தேர்வு செய்துள்ளதாக, நிறுவன நிர்வாகிகள் தெரிவித்தனராம். இதையடுத்து, சொந்த ஊருக்குச் சென்றுவிட்டு வேலையில் வந்து சேர்வதாக மூன்று பெண்களும் தெரிவித்தபோது, வீட்டுக்கு செல்லக் கூடாது எனக் கூறிய நிர்வாகிகள், ஓர் அறையில் 3 பேரையும் அடைத்துள்ளனர். அவர்களுக்கு உணவும் தரவில்லையாம்.

விசாரணையில் இந்தத் தகவல்கள் தெரியவந்ததையடுத்து, ராஜாமணி அளித்த புகாரின்பேரில், 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிந்து வேலைவாய்ப்பு நிறுவன  உரிமையாளர் தமிழ்வேந்தன் (65), இவரது மகன் ராஜா சாலமோன் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.