முகப்பு
தற்போதைய செய்திகள்

டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ் இன்று ஓய்வு: புதிய தலைவர் நாளை பொறுப்பேற்பு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் பொறுப்பில் இருந்து ஆர்.நடராஜ் இன்று ஓய்வு பெறுகிறார்.

Updated On : 12 மார்ச், 2013 at 10:49 AM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:05 PM

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய (டி.என்.பி.எஸ்.சி.,) தலைவர் பொறுப்பில் இருந்து ஆர்.நடராஜ் இன்று ஓய்வு பெறுகிறார்.

புதிய தலைவராக அறிவிக்கப்பட்டுள்ள மூத்த வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை காலை 10 மணிக்கு பொறுப்பேற்கிறார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக, ஓய்வு பெற்ற டி.ஜி.பி. ஆர்.நடராஜ், கடந்த ஆண்டு ஜனவரி 23-ம் தேதி நியமிக்கப்பட்டார். அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் பல்வேறு சீரமைப்புகளை மேற்கொண்டார். முதலில், தேர்வாணையத்தின் இணையதளம் முற்றிலும் மாற்றியமைக்கப்பட்டது. தேர்வுகளுக்கு அஞ்சல் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்கிற நிலைமை மாற்றப்பட்டு ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

Advertisement

இது தேர்வர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் தேர்வு குறித்த தகவல்கள் தேர்வர்களுக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். வழியாக தெரிவிக்கப்பட்டது. ஆன்-லைன் முறையில் தேர்வு எழுதும் நவீன திட்டமும் டி.என்.பி.எஸ்.சி.யில் அறிமுகப்படுத்தப்பட்டது. கலந்தாய்வின்போது மோசடிகள் மற்றும் முறைகேடுகளைத் தடுக்க கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டன.

தேர்வின்போது தேர்வர்களின் அனைத்து நடவடிக்கைகளும் விடியோ மூலம் படம் பிடிக்கப்பட்டன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமானது மற்ற மாநிலங்களின் இணையதளங்களுக்கு சவால் விடும் வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த ஓராண்டில் மட்டும் ஆயிரக்கணக்கான காலிப் பணியிடங்கள் விரைந்து நிரப்பப்பட்டன.

புதிய கட்டடமும், வசதிகளும்: நெரிசல்மிகுந்த கட்டடத்தில் இயங்கி வந்த டி.என்.பி.எஸ்.சி. கட்டடம், சென்னையின் பிரதான இடமான பிராட்வே பகுதியில் நவீன வசதிகளுடன் விசாலமான இடத்துக்கு இடம்பெயர்ந்தது. இது டி.என்.பி.எஸ்.சி. ஊழியர்களிடையே மட்டுமன்றி தேர்வர்களிடையேயும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதுபோன்று டி.என்.பி. எஸ்.சி.யில் பல முக்கியத்துவமான மாற்றங்கள், தேர்வாணையத் தலைவர் நடராஜின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன. அவர் 62 வயதை எட்டுவதால் டி.என்.பி.எஸ்.சி. விதிகளின்படி அவர் இன்று ஓய்வு பெறுகிறார்.

புதிய தலைவர் பொறுப்பேற்பு: டி.என்.பி.எஸ்.சி.யின் புதிய தலைவராக மூத்த வழக்குரைஞர் நவநீதகிருஷ்ணன் புதன்கிழமை (மார்ச் 13) காலை 10 மணிக்கு  பொறுப்பேற்கிறார். இதற்கான நிகழ்ச்சி சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் நடைபெறுகிறது. அவருக்கு இப்போது 57 வயது என்பதால், ஐந்தாண்டு காலத்துக்கு அவர் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பொறுப்பை வகிக்க முடியும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.