காவல் நிலையம் சென்ற ஆட்டோ டிரைவர் மர்மச் சாவு: பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்
மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (32). இவர் அங்கு ஆட்டோ ஓட்டி வந்தார். கதிரவனுக்கும் ஆலப்பாக்கம் ராமசாமி தெருவைச் சேர்ந்த பொன்னி என்ற
சென்னை மதுரவாயல் காவல் நிலையத்துக்குச் சென்ற ஆட்டோ டிரைவர் மர்மான முறையில் இறந்தற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மர்மச் சாவு குறித்து பூந்தமல்லி நீதிபதி விசாரணை செய்து வருகிறார்.
மதுரவாயல் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் கதிரவன் (32). இவர் அங்கு ஆட்டோ ஓட்டி வந்தார். கதிரவனுக்கும் ஆலப்பாக்கம் ராமசாமி தெருவைச் சேர்ந்த பொன்னி என்ற சசிகலாவுக்கும் (32) இடையே தவறான உறவு இருந்ததாக தெரிகிறது.கதிரவனுக்கு, திருமணம் செய்ய அவர் பெற்றோர் பெண் பார்க்கத் தொடங்கினராம். இது தொடர்பாக கதிரவனுக்கும், பொன்னிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாம். இந்நிலையில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கதிரவன் மதுபோதையில் பொன்னியிடம் அவர் வீட்டு முன்பு தகராறு செய்துக் கொண்டிருந்தாராம்.
அப்போது அங்கு வந்த போலீஸார், அவர்கள் இருவரையும் விசாரணைக்காக போலீஸார் மதுரவாயல் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு முதலில் போலீஸார் பொன்னியிடம், விசாரணை செய்து அவரை அனுப்பி விட்டனராம். பின்னர் கதிரவனிடம் போலீஸார் விசாரணை செய்ததாக கூறப்படுகிறது. விசாரணையின்போது அவர் மயங்கி விழுந்ததால், போலீஸார் அவரை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அதேநேரத்தில் போலீஸார், பொன்னிக்கும், கதிரவன் மயங்கி விழுந்தது குறித்து தகவல் தெரிவித்தனர்.தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட அவர், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சோதித்து பார்த்த மருத்துவர்கள், கதிரவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இது குறித்து மதுரவாயல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
Advertisement
இதற்கிடையே போலீஸார் தாக்கியதிலேயே கதிரவன் இறந்ததாகவும், அவர் இறந்ததற்கு காரணமாக இருந்த போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும் மேட்டுக்குப்பம் மக்கள் வானகரத்தில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்று, பொதுமக்களுடன் சமாதானம் பேசினர். இதில் பொதுமக்கள் சமாதானமடையாததால் போராட்டம் தொடர்ந்து நடைபெற்றது. இதனால் அப் பகுதியில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதையடுத்து போலீஸார், சாலையில் இருந்த மக்கள் லேசான தடியடி நடத்தி அப்புறப்படுத்தினர். இச் சம்பவத்தால் அப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.