வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.5 லட்சம் மோசடி செய்த போஸ்ட் மாஸ்டர் கைது
காஞ்சிபுரம் மாவட்டம் ஈச்சந்தாங்கல் அருகே உள்ள கலக்காத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மனைவி இந்திரா. இவர் தனது மகன் சக்திவேலுக்கு
காஞ்சிபுரம் மாவட்டம் ஈச்சந்தாங்கல் அருகே உள்ள கலக்காத்தூர் மெயின் ரோட்டை சேர்ந்தவர் சண்முகம் என்பவரது மனைவி இந்திரா. இவர் தனது மகன் சக்திவேலுக்கு வேலை வாங்கி தரும்படி,வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த கலவை அருகே அகரம் கிராமத்தில் உள்ள கிளை தபால் நிலைய போஸ்ட் மாஸ்டர் நாகேந்திரனிடம் கேட்டதாக கூறப்படுகிறது. அதை தொடர்ந்து நாகேந்திரன் சக்திவேலுக்கு சென்னை விமான நிலையத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி, அதற்காக இந்திராவிடம் ரூ.5 லட்சம் பணமும் பெற்றதாக கூறப்படுகிறது.
பணத்தை பெற்ற சில நாட்களிலேயே நாகேந்திரன் விமான நிலையத்தில் வேலையில் சேருவதற்கான பணி நியமன ஆணை ஒன்றை கொடுத்ததாகவும், அதை சக்திவேல் விமான நிலைய அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது தான் அந்த ஆணை போலியானது என்பதும் தெரியவந்தது. அதை தொடர்ந்து இந்திரா, நாகேந்திரனிடம் தான் கொடுத்த பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அதற்கு நாகேந்திரன் பணத்தை தருகிறேன் என கூறி பணத்தை திருப்பி கொடுக்காமல் தாமதித்து வந்தார். இந்நிலையில் இது தொடர்பாக இந்திரா வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஈஸ்வரனை சந்தித்து புகார் தெரிவித்தார். பின்னர் கலவை போலீசிலும் புகார் கொடுத்தார். அதன் பேரில் கலவை போலீசார் வழக்கு பதிவு செய்து போஸ்ட் மாஸ்டர் நாகேந்திரன் (எ) தனசேகரை கைது செய்தனர். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.