முகப்பு
தற்போதைய செய்திகள்

கரூரில் வழக்குரைஞர்கள் சாலை மறியல்

வழக்குரைஞர் தம்பதியை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம்

Updated On : 22 ஆகஸ்ட், 2013 at 4:53 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 3:19 PM

வழக்குரைஞர் தம்பதியை மிரட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளரை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூரில் வழக்குரைஞர்கள் இன்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்துக்கு வழக்கு சம்பந்தமாக கடந்த மாதம் 31-ம்தேதி சென்று விட்டு, வீட்டுக்குத் திரும்பும்போது வழக்குரைஞர் தம்பதியினர் பி.கே.ரவி, உமாதேவியை மற்றொரு தரப்பினர் மிரட்டிச் சென்றார்களாம்.

இதுகுறித்து வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரில் வழக்குரைஞர்களை மிரட்டியவர்கள் கைது செய்யப்பட்டு, உடனடியாக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்களாம்.

Advertisement

வழக்குரைஞர்கள் தம்பதியினரை மிரட்டியவர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்காமல் உடனடியாக ஜாமீனில் விடுவித்த காவல்துறையினரைக் கண்டித்தும், வேலாயுதம்பாளையம் காவல் நிலைய ஆய்வாளரை பணியிடமாற்றம் செய்யக் கோரியும் கரூர் வழக்குரைஞர்கள் சங்கத்தினர் கடந்த 14-ம் தேதி முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை திருச்சி-கரூர் சாலையில் சுங்ககேட் பகுதியில் வழக்குரைஞர் சங்கத் தலைவர் மாரப்பன் தலைமையில் வழக்குரைஞர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம் குறித்து தகவலறிந்த கரூர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ்குமார் அப்பகுதிக்குச் சென்று வழக்குரைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளருக்கு வேறு பணி வழங்கப்படும் என தெரிவித்தார்.

இதையடுத்து வழக்குரைஞர்கள் சாலை மறியலைக் கைவிட்டனர். தொடர்ந்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜெயசங்கரனை சந்தித்து தங்களது நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தை இன்று முதல் கைவிடுவதாகவும், நாளை வெள்ளிக்கிழமை முதல் நீதிமன்ற பணியில் பங்கேற்க போவதாகவும் வழக்குரைஞர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.