முகப்பு
தற்போதைய செய்திகள்

கிராம சபா கூட்டங்களுக்கு அக்.1க்கு முன் நிதிஉதவி வழங்க முதல்வருக்கு பாரிவேந்தர் கோரிக்கை

வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதிக்கு முன்னதாக கிராம சபைக் கூட்டங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On : 11 செப்டம்பர் 2013, 2:31 pm IST
பகிர்:

வரும் அக்டோபர் மாதம் 1ம் தேதிக்கு முன்னதாக கிராம சபைக் கூட்டங்களுக்கு நிதி உதவி வழங்க வேண்டும் என்று தமிழக முதல்வருக்கு ஐ.ஜே.கே. தலைவர் பாரிவேந்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கை:

14 ஆயிரத்திற்கும் அதிகமான ஊராட்சி மன்றங்கள், மக்கள் பிரதிநிதிகளின் மேற்பார்வையிலும், நிர்வாகத்திலும் நடைபெற்று வருகிறது. அரசின் நிர்வாக அடுக்குகளில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஊராட்சி மன்றங்கள். ஒவ்வொரு ஊராட்சிக்கும் இரண்டு, மூன்று இணைப்பு கிராமங்கள் (மதுரா) என மொத்தமாக 60 ஆயிரத்திற்கும் அதிகமான கிராமங்கள் தமிழ்நாட்டில் உள்ளன.

Advertisement

Advertisement

ஊராட்சிகளுக்குத் தேவையான சாலை வசதி, குடிநீர் இணைப்பு, ஆழ்துளை கிணறுகள், ஏரி பராமரிப்பு, தோப்பு துரவுகளின் ஏலம், வீட்டு வரி வசூல் ஆகிய முக்கிய பொறுப்புகள் ஊராட்சி மன்றங்களின் வசம் உள்ளது. வீட்டு வரி, வணிக நிறுவனங்கள், நில பதிவு, ஏரிகுளம் ஆகியவற்றின் ஏலம் இன்ன பிற வகைகளின் மூலம் வசூலிக்கும் நிதி ஆதாரங்களைக் கொண்டே ஊராட்சிகள் இயங்கி வருகின்றன.

ஊராட்சி உதவியாளர்கள் அனைவருக்கும், ஊராட்சி செயலர்கள் என்கிற பெயரில் பொறுப்பு அளிக்கப்பட்டு, அவர்களுக்கான ஊதியம் ஊராட்சி ஒன்றியங்கள் மூலம் வழங்கப்படும் என சமீபத்தில் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதே போல், குடிநீர்த் தொட்டி இயக்குனர்கள் (டேங்க் ஆப்ரேட்டர்) மின் விளக்குகள் பராமரிப்பாளர்கள், துப்புரவு பணியாளர்கள் ஆகியோருக்கான ஊதியங்களையும் உயர்த்த உத்தரவிட்டிருந்தார். எனினும் இவர்களுக்கான மாத சம்பளத்தைக் கூட கொடுக்க ஊராட்சிகளிடம் நிதி வசதி இல்லை. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிராமங்களில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாமல் உள்ளன.

குறிப்பாக, பல ஊராட்சிகளில், மின் கட்டணம் செலுத்தப்படாததால், மின் மோட்டார்கள் இயக்கப்படாமல் உள்ளன. மேல் நிலை நீர்த்தேக்க தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கப்படும் பல கிராமங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டதால், பல கிராமங்களில் தெரு விளக்குகள் எரியாத நிலை உள்ளது. நிதி பற்றாக்குறை உள்ள காரணத்தால், தெரு விளக்குகள் வாங்க முடியாத சூழ்நிலையில் சாலைகள் இருண்டு கிடக்கின்றன.

வரும் அக்டோபர் 1-ம் தேதி, மகாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபா கூட்டங்களை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இக்கூட்டங்களில் மாவட்ட ஆட்சித் தலைவா், திட்ட அலுவலா், வட்டார வளா்ச்சி அதிகாரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டு, பணிகளை ஆய்வு செய்வார்கள் என கூறப்பட்டுள்ளது.

இக் கிராமசபா கூட்டங்கள் நடைபெறுவதற்கு முன்னதாகவே, நிதி பற்றாக்குறை உள்ள ஊராட்சிகளை கணக்கிட்டு, அவா்களுக்குப் போதிய நிதி வசதி அளித்து, தொய்வின்றி ஊராட்சிப் பணிகள் நடைபெறுவதற்கு தமிழக முதலவா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments