வழக்குரைஞர்களின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கினார் முதல்வர்
சென்னை தலைமைச் செயலகத்தில், மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவி வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
சென்னை தலைமைச் செயலகத்தில், மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவி வழங்கும் அடையாளமாக 7 பேருக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை வழங்கினார் தமிழக முதல்வர் ஜெயலலிதா.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 1987-ஆம் ஆண்டு தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ், தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்தின் உறுப்பினர் ஒருவர் உயிரிழந்தால் அவரது சட்டபூர்வ வாரிசுதாரருக்கு அல்லது நியமனதாரருக்கு வழக்கறிஞர்கள் நல நிதியத்திலிருந்து நிதியுதவி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதியத்தின் உறுப்பினராக உள்ள வழக்குரைஞர்களின் மறைவின் போது, அவர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவி 2 லட்சம் ரூபாயிலிருந்து 5 லட்சத்து 25 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
Advertisement
இந்த உதவித் தொகையை இடையூறு இல்லாமல் தொடர்ந்து வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்குவதற்கு ஏதுவாக தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நலநிதியத்திற்கு ஆண்டு தோறும் 4 கோடி ரூபாய் தமிழக அரசின் மானியமாக வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.
தமிழ்நாடு வழக்கறிஞர்கள் நல நிதியச் சட்டத்தின் கீழ் உறுப்பினராக பதிவு செய்த வழக்குரைஞர்களுக்கு அவர்களின் பதிவு காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ளாமல், ஒரே சீராக எந்தவித வகைப்பாடும் இல்லாமல் மறைந்த வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்தார்.
அதன்படி, மறைந்த 66 வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் என மொத்தம் 3 கோடியே 46 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. அவர்களில் 7 வாரிசுதாரர்கள் / நியமனதாரர்களுக்கு நிதியுதவியாக தலா 5 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் இன்று வழங்கினார்.