ஏரிகளை இணைத்து நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கு முதல்வர் அடிக்கல்
கும்மிடிப்பூண்டி அருகே இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா புதனன்று அடிக்கல் நாட்டினார்.
கும்மிடிப்பூண்டி அருகே இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்துக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா புதனன்று அடிக்கல் நாட்டினார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், 11.9.2013 அன்று தலைமைச் செயலகத்தில், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்
நீரின்றி அமையாது உலகம் என்ற வாக்கிற்கேற்ப, மனித வாழ்க்கைக்கு மிகவும் இன்றியமையாததாக விளங்கும் நீரை வீணாக்காமல் நீர்நிலைகளில் தேக்கி வைப்பது மிகவும் அவசியம் ஆகும். தமிழகத்தில் அனைத்து மக்களுக்கும் பாதுகாப்பான குடிநீர் அளித்திடவும், பெருகி வரும் மக்கள் தொகையின் குடிநீர் தேவைகளை முழு அளவில் பூர்த்தி செய்யும் வகையிலும் தமிழகத்திலுள்ள ஏரிகளில் கூடுதலாக தண்ணீர் சேமித்து வைக்க சீராக்க பணிகளையும், புதிய நீர்த்தேக்கங்களை உருவாக்கிடும் பணிகளையும் தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.
Advertisement
சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகரங்களில் மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ஆந்திராவிலிருந்து பெறப்படும் கிருஷ்ணா குடிநீரையும், பருவகாலங்களில் பொழியும் மழைநீரையும் கூடுதலாக தேக்கி வைக்க, திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நீர்த்தேக்கம் ஒன்றினை தோற்றுவிக்க முதல்வர் கடந்த 2012-ஆம் ஆண்டு உத்தரவிட்டார்.
அதன்படி, 330 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டம், கண்ணன்கோட்டை மற்றும் தேர்வாய்கண்டிகை ஆகிய கிராமங்களில் உள்ள இரண்டு ஏரிகளை இணைத்து புதிய நீர்த்தேக்கம் அமைக்கும் திட்டத்திற்கு முதல்வர் புதன்கிழமையன்று அடிக்கல் நாட்டினார்.
இந்தப் புதிய நீர்த்தேக்கத்தில், ஒரு ஆண்டுக்கு இரு முறை தண்ணீர் நிரப்புவதன் மூலம் 1000 மில்லியன் கன அடி நீரைச் சேமித்து வைக்கலாம். இதனால் சென்னை மாநகர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கான குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த வழிவகை ஏற்படும்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் கே.வி. இராமலிங்கம், தலைமைச் செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன், பொதுப்பணித் துறை செயலாளர் முனைவர் எம். சாய் குமார், பொதுப் பணித் துறை முதன்மை தலைமைப் பொறியாளர் (நீர் பாசனம்) எஸ். அசோகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.