மே 14-இல் பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம்: நிதின்கட்கரி பங்கேற்கிறார்
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மே 14-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவிருக்கிறது. இதில் பாஜக மூத்த தலைவர் நிதின்கட்கரி, மேலிடப்பொறுப்பாளர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் மே 14-ஆம் தேதி பெங்களூரில் நடைபெறவிருக்கிறது. இதில் பாஜக மூத்த தலைவர் நிதின்கட்கரி, மேலிடப்பொறுப்பாளர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள்.
கர்நாடக சட்டப்பேரவை தேர்தலை ஜெகதீஷ்ஷெட்டர் தலைமையில் எதிர்கொண்ட பாஜக, 40 இடங்களில் மட்டும் வெற்றிபெற்றது. இதனால் கட்சிக்கு பெரும்பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சிக்கு ஏற்பட்ட தோல்வியின் காரணங்களை கண்டறிய மே 14-ஆம் தேதி பாஜக மூத்த தலைவர் நிதின்கட்கரி, மேலிடப்பொறுப்பாளர் தர்மேந்திரபிரதான் உள்ளிட்டோர் பெங்களூருக்கு வருகைதரவிருக்கிறார்கள். இதனையொட்டி, பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தை கூட்டவும் அக்கட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூர்,மல்லேஸ்வரத்தில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் மே 14-ஆம் தேதி காலை 11 மணிக்கு இந்த கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் பிரஹலாத்ஜோஷி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில் நிதின்கட்கரி, தர்மேந்திரபிரதான், முன்னாள் முதல்வர் ஜெகதீஷ்ஷெட்டர், தேசிய துணைத்தலைவர் சதானந்தகௌடா, ஆர்.அசோக், கே.எஸ்.ஈஸ்வரப்பா உள்ளிட்டோர் கலந்து கொள்கிறார்கள். பாஜக சட்டப்பேரவை கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். தலைவராக ஜெகதீஷ்ஷெட்டர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதை தொடர்ந்து, தேர்தல் தோல்விக்கான காரணங்கள் கூட்டத்தில் ஆராயப்படுகிறது. பாஜகவுக்கு எதிராக நடைபெற்ற பொய்பிரசாரமா? அல்லது எடியூரப்பா, ஸ்ரீராமுலு கட்சிகள் வாக்குகளை பிரித்ததாலா? போன்ற கோணத்தில் தேர்தல் தோல்வி அலசப்படுகிறது. அடுத்த மக்களவை தேர்தலுக்கு கட்சியை பலப்படுத்துவது குறித்தும் இக்கூட்டத்தில் ஆராயப்படவுள்ளது. மே 15-ஆம் தேதி மாவட்டத்தலைவர்கள் மற்றும் மாநில முதன்மைச்செயலாளர்கள் கூட்டத்தை நடத்தியும், தேர்தல் தோல்விக்கான காரணம் கண்டறியப்படுகிறது.