சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை: பெண் புகார்
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநரிடம் இளம்பெண்
சோளிங்கர் அரசு மருத்துவமனையில் தனக்கு தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேலூர் மாவட்ட பொது சுகாதாரத்துறை துணை இயக்குநரிடம் இளம்பெண் சனிக்கிழமை புகார் தெரிவித்தார்.அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதை அறிந்த இணை இயக்குநர் குமார், வேலூர் அரசு மருத்துவமனையில் உடனடியாக அப்பெண்ணை உள்நோயாளியாக அனுமதிக்க உத்தரவிட்டார்.
அரக்கோணம் வட்டம், சயனபுரத்தை அடுத்த புதுகண்டிகை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார். இவரது மனைவி மணிமேகலை. கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு 23.8.13 அன்று குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சைக்கு அவர் சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு பிறகு வீடு திரும்பிய அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டதோடு, வீக்கம், வலியால் அவதிப்பட்டு வந்தார்.அதையடுத்து தனியார் மருத்துவரிடம் சென்று பரிசோதித்தபோது, உடலில் ஏற்கெனவே பொறுத்தப்பட்டிருந்த குடும்பக் கட்டுப்பாடு சாதனத்தை எடுக்காமல் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துள்ளதால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், உடனடியாக மற்றொரு அறுவை சிகிச்சை தேவை எனவும் தெரிவித்தார்களாம்.
இதுகுறித்து இணை இயக்குநர் குமாரை சந்தித்து கணவன், மனைவி இருவரும் முறையிட்டனர். அதைத் தொடர்ந்து அப்பெண் வேலூர் பென்லெண்ட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு உடனடியாக அனுமதிக்கப்பட்டார்.
Advertisement
Advertisement