புதுச்சேரி, ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் இலவச வேட்டி சேலைகளை விரைவாக வழங்க வேண்டும் என வலியுறுத்தி புதுச்சேரி நகராட்சி அலுவலகத்தில் திங்கள்கிழமை பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஆதி திராவிடர் நலத்துறை மூலம் பண்டிகை காலங்களில் பொதுமக்கள் நலனுக்காக அனைத்து தொகுதிகளிலும் இலவச வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் பொங்கலுக்காகவும் அனைத்து பகுதிகளிலும் ஆதி திராவிடர் மக்களுக்கு இலவச கைலி , சேலை வழங்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் முதல் புதுச்சேரியின் அனைத்து பகுதிகளிலும் வழங்கப்பட்டு வருகிறது.
புதுச்சேரி நகராட்சி , உழவர்கரை நகராட்சி பகுதிகளில் விடுபட்ட மக்களுக்கு 21- ம் தேதி , 24 -ம் தேதி , 27 ம் தேதிகளில் நகராட்சி அலுவலகத்தில் வழங்கப்படும் என்று நகராட்சி மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி திங்கள்கிழமை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்த பகுதி மக்கள் கம்பன் கலையரங்கில் உள்ள நகராட்சி அலுவலகத்திர்ற்கு வந்துள்ளனர். இங்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை.
மேலும் இலவச வேட்டி சேலைகளை தருவதாக யாரும் சொல்லாததால் கோபமடைந்த பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
எங்களுக்கு பொங்கல் பண்டிகைக்காக வழங்கவேண்டிய இலவச வேட்டி சேலைகளை இதுவரை வழங்காமல் இருக்கின்றனர். இதுகுறித்து கேட்டபோது திங்கள்கிழமை அலுவலகத்திற்கு வரச்சொன்னார்கள்.
இங்கே வந்து பார்த்தால் அதிகாரிகள் யாரும் இல்லை. அதனால் எங்களுக்கு வேட்டி, சேலைகளை வழங்க வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடத்தப்பட்டது எனத் தெரிவித்தனர்.