லஞ்ச ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற நான்கு அரசு அலுவலர்கள் தற்காலிக பணியிடை நீக்கம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அரசுப் பண மோசடி வழக்கில் புதன்கிழமை வழங்கிய
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றம் அரசுப் பண மோசடி வழக்கில் புதன்கிழமை வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் விருதுநகர் மாவட்டத்தில் பணியில் உள்ள நான்கு அரசு அலுவலர்களை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
விருதுநகர் மாவட்டத்தில் சிறு சேமிப்புத் தொகைக்கான கமிஷன் தொகையில் ரூ.14.43 லட்சம் மோசடி செய்ததாக மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார் 2007-ம் ஆண்டு தொடர்ந்த வழக்கில் பணியில் உள்ள துணை வட்டார வளர்ச்சி அலுவர்கள் உள்ளிட்ட 5 பேருக்கும், ஓய்வு பெற்ற ஆட்சியரின் நேர்முக உதவியாளர் உள்ளிட்ட 6 அரசு ஊழியர்களுக்கும் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் தலா 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், தலா ரூ.1.21 லட்சம் அபராதமும் விதித்து புதன்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் தண்டனை பெற்றவர்களில் ஆர்.மகாலட்சுமி, சாத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உதவியாளராகவும், பி.ராஜலட்சுமி விருதுநகர் உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்தில் உதவியாளராகவும், கே.ஞானசௌந்தரி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (திட்டம்), டி.கிருஷ்ணமூர்த்தி வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (சத்துணவு) பணியில் உள்ளார்கள்.
Advertisement
Advertisement
இவர்கள் நால்வரையும் நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்பு வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை பெற்ற காரணத்திற்காக மாவட்ட ஆட்சித் தலைவர் அ.சிவஞானம் தற்காலிக பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். தண்டனை பெற்றவர்களில் மற்றொருவரான சந்திரசூடன் என்பவர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.