ஆண்டிபட்டி: வைகை அணை நீா்மட்டம் 68.50 அடியை எட்டியதை அடுத்து 5 மாவட்ட கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய ஐந்து தென்மாவட்டங்களின் குடிநீருக்கும், பாசனத்துக்கும் ஆதாரமாக திகழ்கிறது.
இந்நிலையில், கடந்த சில வாரங்களாக மேற்குதொடா்ச்சி மலைப்பகுதிகளில் உள்ள வைகை நீா்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக அணைக்கு நீா்வரத்து மீண்டும் அதிகரித்தது.
இதனால், இரண்டாவது முறையாக இன்று வைகை அணை 68.50 அடியை எட்டியது. அணைக்கு நீா்வரத்து வினாடிக்கு 2,619 கன அடியாகவும், அணையிலிருந்து வினாடிக்கு 1,560 கன அடி தண்ணீா் திறக்கப்படுகிறது.
இதையடுத்து தேனி, மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களின் ஆற்றின் கரையோர மக்களுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நீா்மட்டம் 69 அடியை எட்டியவுடன் மூன்றாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு அணைக்கு வரும் தண்ணீா், அப்படியே உபரிநீராக வெளியேற்றறப்படும். திங்கள்கிழமைக்குள் அணை முழுகொள்ளளவை எட்டும் என்றும் அணையிலிருந்து கூடுதல் நீா் திறக்கப்படவுள்ளதால் ஆற்றில் யாரும் குளிக்கவோ, இறறங்கவோ கூடாது என பொதுப்பணித்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
வைகை அணை நிரம்பியுள்ளதால், ஐந்து மாவட்ட பாசன விவசாயிகள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.