ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகளைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு வெகுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நேற்று (ஏப்.22) மதியம் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவமானது கடந்த 2019-ம் ஆண்டு நடத்தப்பட்ட புல்வாமா தாக்குதலுக்கு பின்னர் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய பயங்கரவாதத் தாக்குதலாகக் கொள்ளப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதல் நடைபெற்ற பெஹல்காம் அமைந்துள்ள ஆனந்த்நாக் மாவட்டத்தின் காவல் துறையினர், தீவிரவாதிகளைக் குறித்த தகவல்கள் வழங்குபவர்களுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, சுற்றுலாப் பயணிகள் மீது கோழைத்தனமான தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்க அளிக்கப்படும் தகவலுக்கும் ரூ.20 லட்சம் வெகுமதியாக வழங்கப்படும் எனவும் தகவல் அளிப்பவரின் அடையாளம் ரகசியமாகப் பாதுகாக்கப்படும் எனவும் பதிவில் கூறப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தத் தாக்குதல் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு உயிர் பிழைத்த மக்கள் அளித்த தகவல்களின் அடிப்படையில் வரையப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் மாதிரி ஓவியங்களை காவல் துறையினர் இன்று காலை வெளியிட்டிருந்தனர்.
அந்த மூவரும் பாகிஸ்தான் நாட்டினர் என்றும் இந்தத் தாக்குதலுக்கு தடைசெய்யப்பட்ட லஷ்கர்-எ-தைபா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான தி ரெஸிஸ்டன்ஸ் ஃப்ரொண்ட் எனும் அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக தகவல் வெளியானது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க:அட்டாரி-வாகா எல்லை மூடல்; மத்திய அரசு அதிரடி உத்தரவு!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.