அனைத்து வகையான விளைபொருள்களையும் விவசாயிகளிடம் இருந்து அரசே நேரடியாக கொள்முதல் செய்து ரேஷன் கடைகளில் நியாயமான விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தண்ணீர் பற்றாக்குறை, இடுபொருள்கள் விலை உயர்வு, பூச்சி, நோய் தாக்குதல் போன்ற பல்வேறு சிரமங்களுக்கு இடையே சாகுபடியை மேற்கொண்டு அதனை அறுவடை செய்து விற்பனைக்குக் கொண்டு வரும் விவசாயிகளுக்கு நிச்சயமில்லாத விலை பெரும் ஏமாற்றத்தைக் கொடுக்கிறது.
பன்மடங்கு லாபம்
விவசாயிகளிடம் இருந்து மிகவும் குறைந்த விலைக்கு விளை பொருள்களைக் கொள்முதல் செய்யும் மொத்த வியாபாரிகள் பல மடங்கு விலையை உயர்த்தி விற்பனை செய்து பெரும் லாபம் ஈட்டுகின்றனர்.மேலும், விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களைக் கொள்முதல் செய்யும் வியாபாரிகள் அதனைப் பதுக்கி வைத்து செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குகின்றனர். இதனால் ஒரு சில நேரங்களில் அத்தியாவசியப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்து நுகர்வோர் பாதிக்கப்படுகின்றனர்.
நேரடி கொள்முதல்
இதுபோன்ற அவல நிலையைத் தவிர்க்க. உற்பத்தி செய்யும் விவசாயிகளும், அதனைப் பெறும் நுகர்வோரும் பயன்பெறும் வகையில் விளைபொருள்களை அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து ரேஷன் கடைகள் மூலமாக விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டக் குழுத் தலைவர் சுப.பழனிசாமி கூறியதாவது: வறட்சி, பூச்சி, நோய்த் தாக்குதல், இயற்கைப் பேரிடர் உள்பட ஒவ்வொரு பருவத்திலும் விவசாயிகள் ஒவ்வொரு வித பிரச்னையை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இவற்றையெல்லாம் முறியடித்து விளைபொருள்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்குப் போதிய விலை கிடைக்காதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்துகிறது. இந்நிலையில் அரசே நேரடியாக விவசாயிகளிடம் இருந்து விளைபொருள்களை உற்பத்தி செலவில் இருந்து 50 சதவீதம் கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்ய வேண்டும். இவற்றை பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயமான விலைக்கு நுகர்வோருக்கு விற்பனை செய்ய வேண்டும். இந்த நடைமுறையால் விளைபொருள்கள் பதுக்கல் குறைந்து செயற்கை தட்டுப்பாடு இல்லாமல் நியாயமான விலையில் நுகர்வோருக்கு பொருள்கள் கிடைக்கும்.
வேளாண்மை, தோட்டக் கலை, வேளாண் விற்பனை மற்றும் வணிகம், வேளாண்மை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், முன்னோடி வங்கி நிர்வாகிகள் மற்றும் சிறு, குறு விவசாயிகள் அடங்கிய குழுக்களை நியமித்து கணக்கீடு செய்ய வேண்டும். பயிர்களின் உற்பத்திச் செலவு, சந்தைக்குக் கொண்டு செல்லுதல் உள்ளிட்டவற்றை கணக்கீடு செய்து குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயித்து விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்ய வேண்டும். இதனால் அரசு அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச் சுமை இருந்தாலும் விவசாயிகளுக்கு நியாயமான விலையும், நுகர்வோருக்கு உரிய விலையில் தரமான காய்கறிகள் உள்பட அனைத்துப் பொருள்களும் கிடைக்கும்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் விளைபொருள்களை மாவட்டம்தோறும் உள்ள குளிர்பதனக் கிடங்குகளில் இருப்பு வைத்து பாதுகாக்க முடியும். தமிழகம் முழுவதும் 23 விற்பனைக் குழுக்கள் உள்ளன.
இதன் மூலம் கூடுதலாக குளிர்பதனக் கிடங்குகளை அமைத்துப் பயன்படுத்த வேண்டும். ஏனெனில் கோவை மாவட்டத்தில் மட்டும் 25 ஆயிரம் ஹெக்டேரில் காய்கறிகள், பழங்கள் உள்பட தோட்டக்கலைப் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இதன்மூலம் ஆண்டுக்கு 2.5 லட்சம் டன் விளைபொருள்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதனைப் பாதுகாக்க போதுமான குளிர்பதனக் கிடங்குகள் இல்லை. எனவே, குளிர்பதனக் கிடங்குகளை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் விற்பனைத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: நெல், தானியங்கள், பருப்பு வகைகள் ஆகியவற்றைக் கொள்முதல் செய்தால் பொது விநியோகத் திட்டத்தில் பயன்படுத்திக்கொள்ளலாம். தவிர இவற்றினை நீண்டகாலம் இருப்பு வைக்க முடியும். கொப்பரையும் மாநில, தேசிய கூட்டுறவு சங்கங்களின் மூலமே கொள்முதல் செய்யப்படுகிறது. ஆனால் பழங்கள், காய்கறிகள் போன்ற பொருள்கள் எளிதில் அழுகக்கூடியவை. இவற்றைக் கொள்முதல் செய்தவுடனே விற்க வேண்டும். இது சாத்தியமில்லை. காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை இருப்பு வைப்பதிலும் பல்வேறு சிரமங்கள் உள்ளன. அனைத்து விளைபொருள்களையும் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்வது குறித்து அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
-ம.முனுசாமி
அரசு விலை நிர்ணயம்
தமிழகத்தில் 23 வேளாண்மை விற்பனைக் குழுவின் கீழ் செயல்பட்டு வரும் 282 வேளாண்மை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் கொப்பரை, பருத்தி, நெல், பயறு வகைகள், சிறு தானியங்கள் அரசு சார்பில் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்படுகின்றன. கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மூலம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. பட்டுக்கூடு அங்காடிகளில் வியாபாரிகள், விவசாயிகளை ஒன்றிணைத்து ஏலம் நடத்தப்படுகிறது. ஏலத்தில் பட்டுக் கூடுகளுக்கு அரசு சார்பில் குறைந்தபட்ச விலை நிர்ணயிக்கப்படுகிறது. அந்த விலைக்கு மேல்தான் பட்டுக் கூடுகளைக் கொள்முதல் செய்ய வேண்டும் என்று வியாபாரிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.