வேலூர்: இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழக கிளை மூலம் செயல்பட்டு வரும் இலவச அமரர் ஊர்தி ஓட்டுநர் பணிக்கான வேலை வாய்ப்பு முகாம் வேலூரில் வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 12) நடைபெற உள்ளது.
வேலூர் அண்ணா சாலை பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அச்சங்கத்தின் அலுவலகத்தில் காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை இந்த வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது. இப்பணிக்கு தேர்வு செய்யப்படுபவர்கள் பகல் மற்றும் இரவு மாற்று ஷிப்ட் முறையில் தினமும் 12 மணி நேரம் பணியாற்ற வேண்டும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருப்பதுடன், 25 வயது முதல் 45 வயதுக்கு உட்பட்டவராகவும், 162.5 செ.மீ உயரம் உடையவராகவும் இருக்க வேண்டும். இலகுரக ஓட்டுநர் உரிமம் அல்லது பாட்ஜ் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் நிறைந்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படுபவர்களுக்கு ஊதியமாக மாதம் ரூ.9,369 வழங்கப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பணியமர்த்தப்பட்டால் கூடுதலாக ரூ.1,800 வழங்கப்படும்.
எனவே, தகுதியும், விருப்பமும் உடைய விண்ணப்பதாரர்கள் இந்தியன் செஞ்சிலுவை சங்க வேலூர் மாவட்ட கிளை முகவரிக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு 94433 20955, 80122 42064 மற்றும் 0416-2234329 என்ற எண்களில் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை இந்தியன் செஞ்சிலுவை சங்கத்தின் வேலூர் மாவட்டத் தலைவரும், மாவட்ட ஆட்சியருமான அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.