வட கேரளம் மாவட்டமான வயநாட்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 365 ஆக உயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்ட பகுதியில் தற்காலிக பாலம் அமைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டு வரும் இந்திய ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவித்து கேரளத்தை சேர்ந்த 3 ஆம் வகுப்பு சிறுவன் எழுதியிருக்கும் கடிதம் இணையதளத்தில் வைரலாகி அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
வடக்கு கேரளம் மாவட்டமான வயநாட்டில் கடந்த வாரம் பெய்த தொடா் கனமழை எதிரொலியாக முண்டக்கை, சூரல்மலை, ஆரண்மலை உள்ளிட்ட வயநாட்டின் மலைக்கிராமங்களான சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை போன்ற கிராமங்களில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 29)பெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. நிலச்சரிவின்போது வீடுகளில் தூங்கி கொண்டிருந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் உயிரோடு மண்ணில் புதைந்தனா். சாலியாற்று வெள்ளத்தில் சிலா் அடித்து செல்லப்பட்டனா்.
மண்ணில் புதையுண்டவா்களையும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டவா்களையும் மீட்பதற்கான மீட்பு-தேடுதல் பணிகள் ஆறாவது நாளாக தேசிய, மாநில பேரிடர் மீட்புப் படையினர், தீயணைப்பு துறையினர், ராணுவ வீரர்கள், விமானப் படையினர், காவல் துறையினர்,மோப்ப நாய்கள், உள்ளூர் மக்கள் என பல குழுக்களாக பிரிந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில், கேரளத்தை சேர்த்த 3 ஆம் படிக்கும் மாணவர் ராயன், மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவ வீரர்களை பாராட்டி இந்திய ராணுவத்துக்குக் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில், “அன்புள்ள இந்திய ராணுவமே, எனது அன்புக்குரிய வயநாடு மிகப்பெரிய நிலச்சரிவில் சிக்கி, பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. நிலச்சரிவில் சிக்கியவர்களை நமது ராணுவ வீரர்கள் மீட்பதைக் கண்டு நான் பெருமையும் பெரும் மகிழ்ச்சியும் அடைந்தேன். மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்கள் பிஸ்கட் சாப்பிடும் விடியோவையும் பார்த்தேன். அது அவர்களது பசியைப் போக்கி இருக்கும் என்று நம்புகிறேன். மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்காக நமது வீரர்கள் ஒரு பாலம் கட்டிய காட்சி என்னை மிகவும் கவர்ந்தது. நானும் ஒரு நாள் நமது ராணுவத்தில் சேர்ந்து என் நாட்டை பாதுகாப்பேன். அதற்காக ஆசைப்படுகிறேன்” என்று எழுதியுள்ளார்.
சிறுவனின் கடிதத்தை இந்திய ராணுவத்தின் தெற்கு கமாண்டின் அதிகாரபூர்வ எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்ததுடன், “சிறுவனின் கடிதம் தங்களுக்கு ஊக்கமளிப்பதாகவும், அந்த மாஸ்டர் வீரர் ராயனுக்கு நன்றி” என்று பதிலளித்துள்ளது.
அதாவது, “உங்கள் இதயப்பூர்வமான வார்த்தைகள் எங்கள் மனத்தை ஆழமாகத் தொட்டன. இக்கட்டான காலங்களில், நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக செயல்படுகிறோம் என்பதை உங்கள் கடிதம் மீண்டும் உறுதிப்படுத்துகிறது. உங்களைப் போன்ற ஹீரோக்கள் எங்களால் முடிந்த அனைத்தையும் செய்ய எங்களுக்கு ஊக்கமளிக்கிறார்கள். நீங்கள் ராணுவ சீருடை அணியும் நாளுக்காக நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம்... இணைந்து நிற்போம், நமது நாட்டை பெருமைப்படுத்துவோம். உங்கள் தைரியத்திற்கும் உத்வேகத்திற்கும் ஆயிரம் நன்றிகள்” என்று இந்திர ராணுவம் நெகிழ்ச்சியுடன் பதில் அளித்துள்ளது.
இவை சமூக வலைதளங்களில் வைரலாகி பார்ப்போர் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.