திமுக மாவட்டச் செயலாளர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை!
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து இன்று பிற்பகல் 12 மணிக்கு நடைபெறும் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் குறித்து...
தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்களுடன் காணொலி மூலம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்துள்ள நிலையில், நாளை தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் கருப்புக் கொடி போராட்டம் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்கும் 106-ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் 2023-ஐ (நாரி சக்தி வந்தன் அதிநியம்) அமல்படுத்துவதற்கான சட்டத் திருத்த மசோதா ஏப்.16 முதல் ஏப்.18 வரை நடைபெறவுள்ள நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் அறிமுகமாகவுள்ளது. அப்போது மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 850-ஆக அதிகரிக்கப்பட்டு அதில் 280 தொகுதிகள் மகளிருக்கு ஒதுக்கப்படவுள்ளன. 850 இடங்களில் 815 இடங்கள் மாநிலங்களுக்கும், எஞ்சிய 35 இடங்கள் யூனியன் பிரதேசங்களுக்கும் ஒதுக்கப்படவுள்ளன.
தொகுதி மறுவரையறை வரைவு மசோதாவின்படி, மக்களவை, மாநில சட்டப்பேரவைகளில் மகளிருக்கான தொகுதிகள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்படும் எனத் தெரியவந்துள்ளது.
Advertisement
தொகுதி மறுசீரமைப்பில் தமிழகத்துக்கான தொகுதிகள் குறைக்கப்பட்டால் 1950, 1960 -களில் நடத்தப்பட்டது போல மிகப் பெரிய அளவிலான போராட்டத்தை திமுக முன்னெடுக்கும் என்று மத்திய அரசுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை எச்சரிக்கை விடுத்துள்ளாா்.
இந்த நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து திமுக எம்.பி.க்களுடன் காணொலி மூலம் திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தொகுதி மறுவரையறைப் பணி தொடர்பாகத் தமிழ்நாடு சந்திக்கவுள்ள பாதிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாவட்டச் செயலளார்கள் கூட்டம்
தற்போது திமுக மக்களவை உறுப்பினர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நிறைவடைந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பிற்பகல் 12 மணிக்கு மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் தொகுதி மறுவரையறைக்கு எதிராகத் தமிழ்நாடு முழுவதும் வீடுகளிலும், பொது இடங்களிலும் நாளை நடைபெற இருக்கும் கருப்புக் கொடி போராட்டம் குறித்தும் ஆலோசிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.