முகப்பு
தற்போதைய செய்திகள்

கரோனா வைரஸைவிட கொடிய வைரஸ் செந்தில் பாலாஜி: எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

கரூரில் இருந்து வந்துள்ள செந்தில் பாலாஜி கரோனா வைரஸைவிட மோசமான வைரஸ் என்று எடப்பாடி பழனிசாமி விமரிசனம் குறித்து...

Updated On : 16 ஏப்ரல் 2026, 3:12 pm IST
எடப்பாடி கே. பழனிசாமி - கோப்புப்படம்
பகிர்:

கோவை: கரூரில் இருந்து வந்துள்ள செந்தில் பாலாஜி கரோனா வைரஸைவிட மோசமான வைரஸ் என்றும் கரோனா வைரஸுக்குக்கூட மருந்து உள்ளது, இந்த வைரஸுக்கு மருந்து இல்லைஎன்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையாக விமரிசனம் செய்தார்.

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வியாழக்கிழமை பிரசாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, செந்தில் பாலாஜியை கடுமையாக விமரிசனம் செய்து பேசினார்.

அப்போது, கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் வானதி சீனிவாசன் தற்போது உடல்நலக்குறைவால் சிகிச்சையில் உள்ளார். இருப்பினும், மக்களை விரைவில் நேரில் சந்திப்பேன் என அவர் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உங்கள் குரலாக செயல்பட்டவர் என்பதால், அவருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றார்.

Advertisement

Advertisement

முன்னதாக மக்கள் தேர்ந்தெடுத்த பிரதிநிதிகள் தொகுதி வளர்ச்சிக்காக பணியாற்றியவர்கள் என்றும், அறிமுகமானவர்களை மீண்டும் தேர்வு செய்வது வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் கூறினார்.

தொடர்ந்து திமுக மற்றும் அதன் வேட்பாளர்களை கடுமையாக விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, கரூர் செந்தில் பாலாஜியை நேரடியாக பெயர் குறிப்பிடாமல் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கரூர் மக்களுக்கு நாமத்தை போட்டுவிட்டு கோவை தெற்கிற்கு வந்துவிட்டார். ஊழல், சட்டவிரோத செயல்கள் உள்ளிட்ட குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டிய அவர், ஒரு தொகுதியில் செயல்பட்டு மக்கள் நம்பிக்கையை இழந்தவர், 5 கட்சிகளுக்கு சென்றவர். தற்போது வேறு தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். கரூரை முடித்துவிட்டு தற்போது கோவைக்கு மாறியுள்ளார்.

கரோனா வைரஸை விட மோசமான வைரஸ்

கோடு போட்டால் ரோடு போடுவாராம் அவர். கரூரில் ரோடு போட்டதில் ஊழல் செய்தவர். பத்து ரூபாய் கமிஷன் அடித்தவரை கோவையின் சிம்ம சொப்பனம் என்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

மேலும், திமுக ஆட்சியில் மின்சார கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு போன்ற காரணங்களால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், மக்களின் கஷ்டங்களை பயன்படுத்தி சிலர் அரசியல் லாபம் பார்க்க முயல்கிறார்கள். ஊழல் மூலம் சம்பாதித்த பணத்தை கொண்டு மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.

கோவை செல்வம் கொழிக்கும் பகுதி என்பதால் இங்கு நிற்கிறார். ஏன் கரூரில் நிற்கவில்லை? என கேள்வி எழுப்பிய பழனிசாமி, கரூரில் இருந்து வந்துள்ள அவர் கரோனா வைரஸை விட மோசமான வைரஸ் என்றும், கரோனா வைரசுக்குக் கூட மருந்து உள்ளது. இந்த வைரசுக்கு மருந்து இல்லை. அரக்கனை விடக் கொடியவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார்.

அன்னைக்கு இருந்த பழனிசாமி வேற, இனிமே வர்ற பழனிசாமி வேற

ஆட்சி மாறினால் ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்த பழனிசாமி, பொய் வழக்குப் போட்ட நடுநிலையற்ற அதிகாரிகள் யாராக இருந்தாலும் அவர்கள் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அன்னைக்கு இருந்த பழனிசாமி வேற, இனிமே வர்ற பழனிசாமி வேற என்றும் சொன்னதைச் செய்வேன் என்று தெரிவித்தார்.

அதே நேரத்தில், தொகுதி மறுவரையறை மசோதா குறித்து பேசும்போது, இந்த மசோதாவால் தமிழகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என மத்திய அரசு தெளிவாக தெரிவித்துள்ளது. இருந்தும் அரசியல் காரணங்களுக்காக திமுக கருப்புக்கொடி போராட்டம் நடத்துகிறது. மேலும், மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தடுக்க திமுக முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

கோவை மக்கள் உஷாரான மக்கள். இங்கு எங்கேயும் கருப்புக்கொடி இல்லை.

திமுக இரட்டை நிலைப்பாடு

நீட், காவிரி உள்ளிட்ட பிரச்னைகளிலும் திமுக இரட்டை நிலைப்பாடு கொண்டுள்ளது என்றும் கூறிய பழனிசாமி, சட்டம்-ஒழுங்கு நிலைமை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், படித்தவர்களையும், படிக்காதவர்களையும் ஏமாற்றும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி. ஸ்டாலினுக்கு தோல்வி ஜூரம் வந்துவிட்டது என்று கூறினார்.

ப.சிதம்பரத்துக்கு என்ன தகுதி இருக்கிறது?

மத்திய நிதியமைச்சராக இருந்த ப.சிதம்பரம் தமிழ்நாட்டுக்கு என்ன கொண்டு வந்தார். அவருக்கு எங்களைப் பற்றி பேசுவதற்கு என்ன தகுதி இருக்கிறது? என கேள்வி எழுப்பினார்.

திமுக கூட்டணியின் 39 மக்களவை உறுப்பினர்களும் பெஞ்ச் தேய்த்துக் கொண்டுள்ளனர்.

39 மக்களவை உறுப்பினர்களும் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து என்ன கொண்டு வந்தனர்? எல்லாம் விளம்பரம், கண் துடைப்பு, தந்திர நாடகம் ஆடுகிறார் ஸ்டாலின் என்றார்.

மேலும், ஒவ்வொரு வாக்கும் முக்கியம். தீய சக்திகளை அகற்றி நல்ல ஆட்சியை கொண்டு வர வேண்டும். மக்கள் விழிப்புடன் இருந்து சரியான தீர்மானம் எடுக்க வேண்டும் என வாக்காளர்களை அவர் கேட்டுக்கொண்டார்.

Regarding Edappadi Palaniswami's criticism that Senthil Balaji, who hails from Karur, is a virus worse than the coronavirus...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.