‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்யக் கூடாது’ - எடப்பாடி பழனிசாமி
‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்யக் கூடாது’ என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
‘நீக்கப்பட்டவர்கள் பொறுப்புகளை கொண்டு விளம்பரம் செய்ய கூடாது’ என்று அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் சமீபத்தில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாகவும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றன. பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக தேர்தல் முடிவுகளுக்குப் பின் 2-ஆக உடைந்தது.
காங்கிரஸ், விசிக, இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவுடன் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் முதல்வராகப் பதவியேற்ற நிலையில், சட்டப்பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், தவெகவினர் தவிர்த்து அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு எம்.எல்.ஏக்கள் 22 பேர் தவெகவை எதிர்த்தும், சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, 25 எம்எல்ஏக்கள் தவெகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனால், சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்களை தங்களது பொறுப்புகளில் இருந்து நீக்கி அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் மீண்டும் அதிமுகவுடன் இணைந்த நிலையில், எஸ்.பி. வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர், உள்ளிட்ட 29 பேர் மாவட்டச் செயலர் மற்றும் அமைப்புச் செயலாளர் என்று பயன்படுத்தாமல் அதிமுக அடிப்படை உறுப்பினர், எம்.எல்.ஏ ஆகிய பொறுப்புகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக அதிமுக தலைமை சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில், “கழகப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களின் பழைய பொறுப்புகளைக் கொண்டு பத்திரிகைகளில் விளம்பரப்படுத்த வேண்டாம் என கழக நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் அனைவருக்கும் தலைமைக் கழகம் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி கே. பழனிசாமியின் ஒப்புதலுடன் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.