கோட்-சூட்-போட்டோஷூட் மாடல் ஆட்சி: சிறுவன் பாலியல் துன்புறுத்தல் சம்பவத்துக்கு இபிஎஸ் கண்டனம்
சென்னையில் சிறுவர் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
சென்னையில் சிறுவர் மீதான பாலியல் வன்கொடுமைச் சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்குமாறு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "சென்னை கோடம்பாக்கத்தில் காவலர் உள்ளிட்ட மூவர் சிறுவனுக்கு வாயில் மது ஊற்றி, கொடும் பாலியல் தொல்லைக்கு ஆளாக்கியதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. சிறுவன் தன்னை தற்காத்துக் கொள்ள காவலரைத் தாக்கிவிட்டு தப்பியோடி, அசோக் நகர் காவல் நிலையத்துக்கு நடந்தே வந்து புகார் அளித்துள்ளதாக செய்திகள் வருகின்றன.
தமிழகத்தில் நாள்தோறும் பரிணமிக்கும் குற்றச் செயல்களின் தன்மை , மிகுந்த அச்சமூட்டுகிறது.
Advertisement
Advertisement
எந்த குழந்தைகளை வைத்து நீங்கள் வாக்கு சேகரித்தீர்களோ, அதே குழந்தைகள் உங்கள் ஆட்சியில் பாதுகாப்பின்றி நிற்கின்றனர். இதற்கெல்லாம் என்ன பதில் சொல்லப் போகிறீர்கள்?
“சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டம்” என ஒன்றை நீங்கள் நடத்தியதாக ஒரு விடியோவை உங்கள் அரசு வெளியிட்டது. அது மற்றுமொரு சம்பிரதாயத்திற்காண கூட்டமாக மாற்றி விடப்பட்டு உள்ளதோ என்ற சந்தேகங்கள் வலுப்பெறுகிறது.
வேலியே பயிரை மேயும் கொடூரம் நடப்பது உங்கள் மனதை உறுத்தவில்லையா? சிறுவனுக்கு நேர்ந்துள்ள இந்த கொடுந்துயருக்கு காரணமான காமுகர்கள் யாராக இருப்பினும், அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இனியேனும் “கோட்-சூட்-போட்டோஷூட்” மாடல் ஆட்சியை கைவிட்டு, சட்டம் ஒழுங்கைக் காக்க உணர்வோடு செயல்பட வேண்டும் என பொய்க்கால் குதிரை அரசை வலியுறுத்துகிறேன்" என்று கூறியுள்ளார்.