பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய் காலமானார்!
நாட்டின் பிரபல மூத்த புகைப்படக் கலைஞர் ரகு ராய்(83) காலமானது குறித்து...
நாட்டின் பிரபல புகைப்படக் கலைஞர் ரகு ராய்(83) ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
நாட்டின் பிரபல மூத்த புகைப்படக் கலைஞரும், புகைப்பட இதழியலின் முன்னோடியாக போற்றப்படுபவருமான ரகு ராய், கடந்த இரண்டு ஆண்டுகளாகப் புற்றுநோயுடன் போராடி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலமானார். அவரது உடல் மாலை 4 மணியளவில் தில்லியில் உள்ள லோதி சாலை மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
தற்போது பாகிஸ்தானில் உள்ள ஜங் பகுதியில் 1942 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி பிறந்த ராய், 1960 இல் தனது புகைப்படக் கலைஞர் தொழிலை தொடங்கியவர், 1965 இல் 'தி ஸ்டேட்ஸ்மேன்' நாளிதழில் புகைப்படக் கலைஞராகப் பணியாற்றினார். 1976 இல் அந்த செய்தி நிறுவனத்தில் வெளியேறியவர், 1982 முதல் 1992 வரை 'இந்தியா டுடே' நாளிதழில் பத்து ஆண்டுகள் புகைப்பட ஆசிரியராக பணியாற்றினார். மேலும், 1990 மற்றும் 1997-க்கு இடைப்பட்ட காலங்களில், 'வேர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ' அமைப்பின் நடுவர் குழு உறுப்பினராக பணியாற்றினார்.
Advertisement
இவரது வழிகாட்டியான புகழ்பெற்ற பிரெஞ்சு புகைப்படக் கலைஞரான ஹென்றி கார்டியர்-பிரெஸான், ராயின் படைப்புகளால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் 1977-ஆம் ஆண்டில் ராயை உலகின் மிகவும் புகழ்பெற்ற புகைப்பட அமைப்புகளில் ஒன்றான 'மேக்னம் ஃபோட்டோஸ்' அமைப்பில் இணையுமாறு பரிந்துரைத்தார். 'மேக்னம்' அமைப்பில் இணைவதற்கு மிகச்சிறந்த புகைப்படக் கலைஞர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்படும்.
இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் மிகவும் மதிக்கப்படும் புகைப்படக் கலைஞர்களில் ஒருவராகத் திகழ்ந்த ராயின் புகைப்படங்கள் பெரும்பாலும் நவீன இந்தியாவின் "காட்சிப் பதிவு" என்று வர்ணிக்கப்படுகின்றன. இவரது புகைப்படங்கள் குறித்து பல்வேறு புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
வரலாற்றிலேயே மிக மோசமான தொழில்சார் பேரிடர்களில் ஒன்றாகக் கருதப்படும் போபால் விஷவாயுப் பேரழிவிற்குப் பிந்தைய காலகட்டத்தில், அவர் மிகவும் வரலாற்றுத் தருணங்கள் நிறைந்த வலிமையான புகைப்படங்களைப் பதிவு செய்தார். அதே வேளையில், அன்னை தெரசா மற்றும் இந்திரா காந்தி போன்ற புகழ்பெற்ற ஆளுமைகளின் தனிப்பட்ட தருணங்களைச் சித்தரிக்கும் நெருக்கமான புகைப்படங்களையும் அவர் தனது புகைப்படக் கருவியின் கண்களால் ஆவணப்படுத்தியவர்.
வங்கதேச விடுதலைப் போரின்போது அவர் எடுத்த வரலாற்றுத் தருணங்கள் மிகுந்த வலிமையான புகைப்படங்களுக்காக, 1972-ஆம் ஆண்டில் அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி மத்திய அரசு கௌரவித்தது.
தனது புகைப்பட நூல்களுக்காக பரவலாக அறியப்பட்ட ராய், இந்தியா: ரிஃப்ளெக்ஷன்ஸ் இன் கலர்' மற்றும் 'ரிஃப்ளெக்ஷன்ஸ் இன் பிளாக் அண்ட் ஒயிட்' ஆகியவை அவரது மிகவும் பிரபலமான படைப்புகளில் சில.
1992-ஆம் ஆண்டில், அமெரிக்காவில் அவருக்கு "ஆண்டின் சிறந்த புகைப்படக் கலைஞர்" என்ற கௌரவம் வழங்கப்பட்டது.
2019-இல் புகைப்படக் கலைத்துறையின் மிக உயர்ந்த சர்வதேச விருதுகளில் ஒன்றான ''அகாதெமி டெஸ் பியூக்ஸ்-ஆர்ட்ஸ் புகைப்பட விருதை' வென்றார். மேலும், 2017-இல் 'வாழ்நாள் சாதனையாளர் விருது' வழங்கி அவரை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் கௌரவித்துள்ளது.