அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான மனு தள்ளுபடி!
அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், ஜெயகுமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி குறித்து...
சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்களான சி.வி.சண்முகம், ஜெயகுமாருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்.23 ஆம் தேதி நடைபெற்றது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 30 ஆம் தேதி தொடங்கியது. மொத்தம் 7,599 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.6 ஆம் தேதி நடைபெற்றது. இதில் 234 தொகுதிகளிலும் மொத்தம் 4,918 மனுக்கள் ஏற்கப்பட்டது. 2,365 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 11 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது.
வேட்புமனுவில் வேட்பாளர்கள் தங்களது அசையும், அசையா சொத்து விவரங்களை குறிப்பிட்டிருந்தனர்.
Advertisement
Advertisement
அதில், சென்னை ராயபுரம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் ஜெயகுமார், சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகவும், இதுதொடர்பான விசாரணைக்கு தேர்தல் ஆணையம் மற்றும் வருமானவரித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என ராயபுரம் தொகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
இதேபோன்று, விழுப்புரம் மாவட்டம், மயிலம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தாக்கல் செய்த வேட்புமனுவில் கூறப்பட்டுள்ள சொத்து விவரங்களின் உண்மைத்தன்மை குறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என அந்த தொகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த நிலையில், இந்த மனுக்கள் மீது உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு முன்பு திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஏற்கனவே இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டதைக் குறிப்பிட்ட நீதிபதிகள், இந்த வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இதையடுத்து அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
The Madras High Court on Monday ordered the quashing of cases filed against former AIADMK ministers C.V. Shanmugam and Jayakumar
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.