டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!
டெலிகிராம் தற்காலிகமாக முடக்கப்பட்டதை எதிர்த்து அந்த நிறுவனம் தில்லி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது பற்றி...
நீட் மறுதேர்வை முறையாக நடத்தும் நோக்கில் டெலிகிராம் செயலி தற்காலிகமாக முடக்கப்பட்டதை எதிர்த்து, அந்த நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (ஜூன் 19) தள்ளுபடி செய்தது.
கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, வினாத்தாள் கசிவைத் தடுக்கும் நோக்கில் ஜூன் 22-ஆம் தேதி வரை டெலிகிராம் செயலிக்கு நாடு முழுவதும் மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்தியாவில் விதிக்கப்பட்ட இந்தத் தற்காலிக தடையை எதிர்த்து, தில்லி உயர்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நேற்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
Advertisement
Advertisement
அதில், “டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சம் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நீதிபதி தேஜஸ் காரியா தலைமையிலான விடுமுறைக்கால அமர்வு இந்த மனுவை தள்ளுபடி செய்து இன்று உத்தரவிட்டது. மேலும், மத்திய அரசின் இந்த முடக்கம் மிகக் குறைந்த கட்டுப்பாடுகளைக் கொண்டது என்றும், டெலிகிராம் வழியாக நடைபெறும் குற்றங்களைத் தடுக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் அந்த உத்தரவில் சுட்டிக் காட்டப்பட்டது.
மத்திய அரசின் இந்தத் தற்காலிகத் தடையால், 15 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் பாதிக்கபடுவர் என்று டெலிகிராம் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டது குறிப்பிடத்தக்கது.