டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்! தில்லி உயர்நீதிமன்றம்
டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் தெரிவித்தது பற்றி...
டெலிகிராம் செயலி நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளதாக தில்லி உயர்நீதிமன்றம் வியாழக்கிழமை (ஜூன் 18) தெரிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்வின் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் டெலிகிராம் செயலி தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துக்கு பல புகார்கள் வந்ததாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, நீட் மறுதேர்வு முடியும் வரை நாடு முழுவதும் டெலிகிராம் செயலி முடக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்தியாவில் விதிக்கப்பட்ட இந்தத் தற்காலிக தடையை எதிர்த்து, தில்லி உயா்நீதிமன்றத்தில் டெலிகிராம் நிறுவனம் மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தில்லி உயர்நீதிமன்றம் இன்று விசாரித்தது.
Advertisement
Advertisement
அதன்படி, வழக்கின் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்ததாவது:
வினாத்தாள் கசிவிலும் நீட் தேர்வு தொடர்பான மோசடி நடவடிக்கைகளுக்கு உதவுவதிலும் டெலிகிராம் சேனல்கள், குழுக்கள் போன்றவை பயன்படுத்தப்பட்டது தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும், டெலிகிராம் செயலி உடனடியாக முடக்கப்படவில்லை என்றும் ஆரம்பத்தில் மிகக் குறைந்த நடவடிக்கையே அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டது.
மத்திய அரசு அதிகாரிகள் கடந்த ஜூன் 3 ஆம் தேதி, டெலிகிராம் பிரதிநிதிகளை ஒரு கூட்டத்துக்கு அழைத்தனர். அந்தக் கூட்டத்தின் போது, கசிந்த தேர்வுத் தாள்களைப் பரப்பும் சேனல்களை முன்கூட்டியே கண்டறிந்து கட்டுப்படுத்துவதில் டெலிகிராம் தவறி வருவதை அரசு சுட்டிக் காட்டியது.
இதுபோன்ற சிக்கல்கள் முன்கூட்டியே கண்டறிவதில் சிக்கல்கள் இருப்பதாக டெலிகிராம் ஒப்புக்கொண்டனர். அதன் பிறகே, டெலிகிராம் முழுவதுமாக முடக்கப்பட்டது.
மேலும், பயங்கரவாதம், சைபர் குற்றங்கள், போதைப் பொருள் கடத்தல், பாலியல் குற்றங்கள், நிதி மோசடிகளுக்கு டெலிகிராம் செயலி பயன்படுகிறது.
டெலிகிராம் செயலியில் உள்ள பாதுகாப்பு அம்சம் மற்றும் தனியுரிமைக் கொள்கைகளால் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுபவர்களைப் எளிதில் கண்டறிய முடிவதில்லை. இது நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.