பயங்கரவாதம்! டெலிகிராம் நிறுவனர் பாவெல் டுரோவ் மீது ரஷியா பரபரப்பு குற்றச்சாட்டு!
டெலிகிராம் நிறுவனர் பாவெல் டுரோவ் மீது ரஷியா முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து...
பயங்கரவாதத்துக்கு உதவுவதாக டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் டுரோவ் மீது ரஷியா அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.
ரஷியாவில், பயங்கரவாத நடவடிக்கைகள் மேற்கொள்ள டெலிகிராம் செயலி பயன்படுத்தப்படுவதாகக் குற்றஞ்சாட்டி அதன் நிறுவனர் பாவெல் டுரோவை சர்வதேச அளவில் தேடப்படும் நபர்களின் பட்டியலில் அந்நாட்டு அரசு சேர்த்துள்ளது.
கடந்த 2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தொடங்கியது முதல், அந்நாட்டில் செயல்பட்டு வரும் சமூக ஊடகங்கள் மற்றும் இணையத் தொலைத் தொடர்பு நிறுவனங்களை முழுவதுமாகத் தங்களின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்கு ரஷிய அரசு முயன்று வருகிறது.
Advertisement
Advertisement
ரஷியாவில் பயங்கரவாதத் தாக்குதல், கொலைகள் மற்றும் சைபர் குற்றங்களில் ஈடுபடுவதற்காக உக்ரைனிய உளவுப் பிரிவுகள், பயங்கரவாதிகள் மற்றும் தீவிரவாதக் குழுக்களால் பயன்படுத்தப்படும் ஏராளமான சேனல்கள் மற்றும் பாட்களை டெலிகிராம் செயலியில் இருந்து நீக்குவதற்கு அந்நிறுவனம் தவறிவிட்டதாக, ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் இன்று (ஜூலை 29) குற்றஞ்சாட்டியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து, இதுவரை டெல்கிராம் நிறுவனத்தின் தரப்பிலிருந்து எந்தவொரு பதிலும் வழங்கப்படவில்லை.
ஆனால், டெலிகிராம் செயலியின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்த, தன்மீது குற்ற விசாரணை மேற்கொள்ள ரஷிய அரசு முயற்சிகள் மேற்கொள்வதாக, பாவெல் டுரோவ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார்.
முன்னதாக, ரஷிய அதிபர் விளாதிமீர் புதினின் ஆட்சியின் கீழ் மக்களின் தனிமனித சுதந்திரம் மற்றும் பேச்சு உரிமைகள் பறிக்கப்படுவதாக, மனித உரிமை அமைப்புகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
சர்வதேச அளவில் பயன்படுத்தப்படும் முகப்புத்தகம், இன்ஸ்டாகிராம், எக்ஸ், சிக்னல் மற்றும் யூடியூப் போன்ற செயலிகளுக்கு ரஷியாவில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வாட்ஸ் அப் மற்றும் டெலிகிராம் ஆகியவற்றின் மீது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Russia has accused Pavel Durov, the founder of the Telegram app, of aiding terrorism.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.