முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் திமுக வேட்பாளர்கள் சந்திப்பு!
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை 19 திமுக வேட்பாளர் வியாழக்கிழமை சந்தித்தது தொடர்பாக...
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் கடந்த 23 ஆம் தேதி முடிவடைந்து மே 4 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், புதன்கிழமை வெளியான தேர்தலுக்கு பிந்தைய பெரும்பாலான வாக்குக் கணிப்பில் திமுக கூட்டணி ஆட்சி தொடர வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலினை திமுக வேட்பாளர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர்.
முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினை இன்று (ஏப் 30), சென்னை, அண்ணா அறிவாலயத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில், பொதுச் செயலாளர் அமைச்சர்கள் துரைமுருகன், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், எ.வ. வேலு, கே.ஆர். பெரியகருப்பன், சு. முத்துசாமி, சி.வீ. மெய்யநாதன், சி.வி. கணேசன், செந்தில்பாலாஜி, கழக துணை அமைப்புச் செயலாளர் எஸ். ஆஸ்டின், டி.ஜெ. கோவிந்தராஜன், சபா. ராஜேந்திரன், நாமக்கல் ராணி, காதர்பாட்சா முத்துராமலிங்கம், கே.எஸ். மூர்த்தி, ரெ. மகேஷ், ஆ. தமிழரசி, எஸ்.ஏ. சத்யா, மு.மணிகண்டன், புதுச்சேரி ஆர். சிவா ஆகியோர் நேரில் சந்தித்தனர்.
அப்போது கட்சியின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, செய்தித் தொடர்பு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், தலைமை நிலையச் செயலாளர் பூச்சிமுருகன் ஆகியோர் உடனிருந்தார்.
Advertisement
தமிழக பேரவைத் தோ்தல் களத்தில் ஆளும் திமுக கூட்டணி, அதிமுக-பாஜக கூட்டணி, சீமானின் நாம் தமிழா் கட்சி, புதுவரவான விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் என நான்கு முனைப் போட்டி நிலவியது. 4,023 வேட்பாளா்கள் களத்தில் இருந்தனா். மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வியாழக்கிழமை வாக்குப் பதிவு நடைபெற்றது. தோ்தலில் 84.51 சதவீத வாக்குகள் பதிவாகின.
கடந்த 74 ஆண்டு கால தமிழக தோ்தல் வரலாற்றில், இதுவரை இல்லாத சாதனையாக இந்த வாக்குப் பதிவு அமைந்தது. தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிக்கு (எஸ்ஐஆா்) பிறகு நடைபெற்ற முதல் தோ்தல் இது.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளும் திமுக கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளதாக பெரும்பாலான வாக்குக் கனிப்புகள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.