காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? முதல்வர் விஜய்க்கு திமுக கேள்வி
மேட்டூர் அணை திறக்கப்படாத விவகாரத்தில் தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பை முதல்வர் அறிவித்திருப்பதாக திமுக விமர்சனம்
மேட்டூர் அணை திறக்கப்படாத விவகாரத்தில் தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பை முதல்வர் விஜய் அறிவித்திருப்பதாக திமுக விமர்சித்துள்ளது.
மேட்டூர் அணை திறப்பு விவகாரம் குறித்து முதல்வர் விஜய்க்கு கேள்வியெழுப்பி திமுகவின் அதிகாரபூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, "தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவைத் தொகுப்பா? கர்நாடகம் சென்ற விஜய் - காவிரி நீரை கொண்டு வருவாரா?
கடந்த ஐந்தாண்டுகளில் இதே நாளில் (ஜூன் 12)காவிரி டெல்டா மாவட்ட விவசாயிகளின் குறுவைப் பருவ நெல் சாகுபடிக்காக முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னின்று, மேட்டூர் அணையைத் திறந்து வைப்பது வழக்கம். அதற்கு முன்பாகவே ஆறுகள், வாய்க்கால்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கடைமடை வரை தண்ணீர் பாய்வதற்கு வழிவகை செய்யப்பட்டிருக்கும். குறுவை நெல் சாகுபடியில் சாதனை அளவை எட்டியதுடன், வேளாண்துறையில் சதவிகித வளர்ச்சியைக் காட்டியது திமுக அரசு.
Advertisement
Advertisement
மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டிய நாளான இன்று, போதிய நீர் இல்லை என்பதால் திறக்கப்படவில்லை. வறண்ட ஆற்றைப் பார்த்து வாடிப் போய் இருக்கிறார்கள் டெல்டா விவசாயிகள். ஆளே இல்லாத கடையில் டீ ஆத்துவது போல, தண்ணீருக்கு வழி செய்யாமல், குறுவை சிறப்புத் தொகுப்பு அறிவிக்கும் ரீல்ஸ் ஆட்சியின் முதல்வர், தனது சொந்த வேண்டுதலுக்காக கர்நாடகத்துக்கு சென்றிருக்கிறார்.
காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பின்படி, ஆணையம் வலியுறுத்தியும் தமிழ்நாட்டுக்கான 19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்கவில்லை. அங்கே நடப்பது காங்கிரஸ் ஆட்சி. அதாவது, தேர்தலுக்கு முன்பே தவெகவுடன் ரகசிய உறவுடன் இருந்த அதே காங்கிரஸ் கட்சியின் ஆட்சி.
தில்லி வரை சென்று உறவு கொண்டாடி வந்திருக்கும் முதல்வர் விஜய், கர்நாடகத்தில் தனது வேண்டுதலுடன், தமிழ்நாட்டு விவசாயிகளின் வேண்டுதலை மனதில் கொண்டு, காங்கிரஸ் அரசுடன் பேசி காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவாரா? இல்லை, விவசாயிகளின் வயிற்றில் அடிக்கப் போகிறாரா?" என்று கூறியுள்ளனர்.