குதிரை பேரம்! முதல்வர் விஜய்க்கு சிக்கலா? ஆதாரங்களுடன் ஆளுநரிடம் திமுக புகார்!
முதல்வர் விஜய் குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக ஆளுநரிடம் திமுக புகார் அளித்திருப்பது பற்றி...
தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யே நேரடியாக குதிரை பேரத்தில் ஈடுபட்டதாகவும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகரிடம் திமுக புகார் அளித்துள்ளது.
திமுக கூட்டணியிலிருந்து கடந்த வாரம் மதிமுக வெளியேறிய நிலையில், தவெகவுக்கு ஆதரவாக செயல்படப் போவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்திருந்தார்.
இதனிடையே கட்சிக் கூட்டத்திலும், செய்தியாளர்கள் சந்திப்பிலும் பேசிய வைகோ, மதிமுகவின் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா செய்து இடைத்தேர்தல் வந்தால், அவர்களுக்கு ஆதரவாக தானே பிரசாரம் செய்கிறேன் என்று முதல்வர் விஜய் சொன்னதாக தெரிவித்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட வெற்றி பெற்ற இருவரை முதல்வர் விஜய் ராஜிநாமா செய்ய சொன்னதை வைகோவே அம்பலப்படுத்தியதாக திமுக தரப்பில் ஆளுநருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேகர், லஞ்ச ஒழிப்புத் துறையிடம் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி புகார் அளித்துள்ளார்.
திமுக வெளியிட்டிருக்கும் அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
”கடையநல்லூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் டி.எம். ராஜேந்திரன் மற்றும் சீர்காழி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் எஸ். செந்தில் செல்வன் ஆகிய இருவரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களாக உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், ஆளும் தமிழக வெற்றிக் கழக அரசுக்குப் பெரும்பான்மை இல்லாததால், சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையைக் குறைக்கும் வகையில் அவர்கள் இருவரையும் பதவி விலகச் செய்ய மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோவுடன் இணைந்து முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் கூட்டுச் சதியில் ஈடுபட்டதை வைகோவே வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
இத்தகைய குதிரை பேரத்தில் முதலமைச்சரே நேரடியாக ஈடுபட்டுள்ளதால் அவர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறைக்கு உத்தரவிடக் கோரி திராவிட முன்னேற்றக் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, தமிழ்நாடு ஆளுநர் அவர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த புகார் கடிதத்துடன் வைகோ பேசிய காணொலிகளின் பின்னூட்டத்தையும் திமுக தலைமை இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Chief Minister Vijay involved in horse-trading - DMK lodges complaint with the Governor
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.