கரூர் செல்வாரா முதல்வர் விஜய்? திமுக வழக்கால் திடீர் சிக்கல்!
திமுகவின் வழக்கால் முதல்வர் விஜய்யின் கரூர் பயணத்துக்கு ஏற்பட்டுள்ள சிக்கல் பற்றி...
உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்திருக்கும் அவசர வழக்கால், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜய்யின் கரூர் பயணத்துக்கு சிக்கல் ஏற்படும் சூழல் நிலவுகிறது.
கரூரில் 2025 செப்டம்பர் 27-ஆம் தேதியில் தவெக தலைவரும் முதல்வருவமான விஜய் தலைமையில் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் பிரசாரத்தின்போது அதிகளவில் கூட்டம் கூடியதால், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர்; 142 பேர் காயமடைந்தனர்.
பாதுகாப்புகள் காரணமாக விஜய் நேரில் செல்லாமல், நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து, ஆறுதல் கூறியிருந்தார். தொடர்ந்து, அவர்களுக்கு நிதியுதவியும் வழங்கியிருந்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தேர்தலில் தவெக வென்று, முதல்வராக விஜய் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், வருகின்ற ஜூலை 10 ஆம் தேதி கூட்ட நெரிசலில் சிக்கி பலியானோரின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாக அமைச்சர் என். ஆனந்த் சமீபத்தில் தெரிவித்தார்.
மேலும், உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு அரசுப் பணி வழங்குவதற்கான நியமன ஆணையையும் முதல்வர் விஜய் வழங்கவிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்துள்ள வழக்கால் முதல்வர் விஜய்யின் கரூர் பயணத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
அமைச்சா் ஆதவ் அா்ஜுனா ஜூலை 2-ஆம் தேதி பொதுவெளியில் பேசுகையில், கரூா் சம்பவத்திற்கு அப்போதைய முதல்வா் மு.க.ஸ்டாலின்தான் காரணம் என்று தெரிவித்திருந்தார்.
இதையடுத்து, கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பான சிபிஐ விசாரணையைப் பாதிக்கும் வகையில் தமிழக முதல்வா் சி. ஜோசப் விஜய் உள்ளிட்ட எவரும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்கக் கூடாது என்று உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் முன்னாள் எம்.பி.யும் திமுக அமைப்புச் செயலருமான ஆா்.எஸ். பாரதி வெள்ளிக்கிழமை மனு அளித்திருந்தார்.
இந்த மனுவில், ”பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப் பணி ஆணைகளை வழங்க முதல்வா் சி. ஜோசப் விஜய் ஜூலை 10-இல் கரூா் செல்லவுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. விசாரணை நிலுவையில் உள்ளபோது, ஆட்சியில் உள்ளவா்கள் சாட்சிகளை நேரடியாகத் தொடா்புகொள்வது விசாரணையின் நோ்மையைக் கேள்விக்குறியாக்கும். எனவே, சிபிஐ-இன் கருத்துகளைப் பெற்ற பிறகே இந்தச் சந்திப்பை அனுமதிக்க வேண்டும்.” என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் நீதிபதிகள் அசானுதீன் அமானுல்லா மற்றும் ஷீல் நாகு அமர்வு நாளை விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த விசாரணையின்போது, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்க முதல்வர் விஜய்க்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தால், அவரின் கரூர் பயணம் ரத்து செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
Will Chief Minister Vijay visit Karur? Sudden hurdle due to a DMK lawsuit!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.