டிஜிபியிடம் குதிரை பேரம் புகார்! தீயசக்தி திமுகவுடன் எந்த காலத்திலும் அதிமுக சேராது! கொறடா
குதிரை பேரம் தொடர்பாக டிஜிபியிடம் அதிமுக கொறடா புகார் அளித்துள்ளது பற்றி...
அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடைபெற்றதாக டிஜிபி அலுவலகத்தில் அதிமுக கொறடா புகார் அளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தரப்பு எம்எல்ஏக்கள் பிரிந்து, சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தவெகவுக்கு ஆதரவு அளித்ததைத் தொடர்ந்து அதிமுகவில் இபிஎஸ் அணி, எஸ்.பி. வேலுமணி அணி என இரண்டாகப் பிரிந்தது. பின்னர் பல அரசியல் கட்ட நகர்வுகளுக்கு பிறகு இரு அணிகளும் இணைந்தன.
எனினும் அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் ஜெயக்குமார், மரகதம் குமரவேல், சத்யபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் தங்கள் பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். இவர்களிடம் தவெக அரசு குதிரை பேரம் நடத்தியதாக ஏற்கெனவே பேரவைத் தலைவரிடம் அதிமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இதன் தொடர்ச்சியாக சென்னை டிஜிபி அலுவலகத்தில் இன்று அதிமுக நிர்வாகிகள் புகார் அளித்துள்ளனர்.
அதிமுக எம்எல்ஏக்களிடம் குதிரை பேரம் நடந்துள்ளதாகவும் அதுபற்றி விசாரிக்க வேண்டும் என்றும் அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி, எம்.பி. இன்பதுரை ஆகியோர் டிஜிபியைச் சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். குதிரை பேரம் தொடர்பாக புகார் அளித்தும் லஞ்ச ஒழிப்புத் துறை நடவடிக்கை எடுக்காததால் டிஜிபியிடம் புகார் அளித்துள்ளதாக அக்ரி கிருஷ்ணமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மேலும் செய்தியாளர்களுடன் அவர் பேசுகையில்,
"ஆட்சியை காப்பாற்றுவதற்காக குதிரை பேரம் நடக்கவில்லை என்று தவெகவினர் கூறுகிறார்கள். உள்ளே நடந்தது என்ன என்று மக்களுக்கு தெரியும்.
அதிமுகவில் எந்தவிதமான உள்கட்சி பூசலும் இல்லை. மாவட்ட வாரியாக ஆலோசனையை நடத்திவருகிறார் எடப்பாடி பழனிசாமி. அவரின் தலைமையின் கீழ் கட்டுப்பட்ட இயக்கமாக அதிமுக செயல்பட்டு கொண்டிருக்கிறது. திமுக - அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தை எதுவும் நடத்தவில்லை. தீயசக்தி திமுகவை எதிர்த்து ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அதிமுக. எந்த காலத்திலும் அவர்களுடன் ஒன்றுசேராது" என்று கூறினார்.
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோரும் எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தது குறிப்பிடத்தக்கது.
The AIADMK will never join hands with the evil force known as the DMK: AIADMK Whip
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.