முகப்பு
தற்போதைய செய்திகள்

மத்திய கிழக்கு நாடுகளில் வசிக்கும் இந்திய மக்கள் பாதுகாப்பை உறுதி செய்க: ராகுல் காந்தி

மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தல் குறித்து...

Updated On : 1 மார்ச் 2026, 5:05 pm IST
ராகுல் காந்தி
பகிர்:

புதுதில்லி: அமெரிக்க-இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் போா்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் இந்திய மக்களின் பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிக்கத் தேவையான யுரேனியத்தை செறிவூட்டி வருவதாகக் குற்றஞ்சாட்டி சனிக்கிழமை ஈரான் மீது அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் அதிரடித் தாக்குதலை தொடங்கின.

ஈரான் தலைநகா் டெஹ்ரான் முழுவதும் குண்டுகள் வெடித்தன. ஈரான் தலைமை மத குரு அயதுல்லா அலி கமேனி அலுவலகம் அருகே நடத்தப்பட்ட தாக்குதலில் அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் அறிவித்தது.

Advertisement

Advertisement

இந்த தாக்குதலில் ஈரானில் 200-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்ததாகவும், 700-க்கும் மேற்பட்டோா் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அமெரிக்க-இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஒரு மகளிா் தொடக்கப் பள்ளி மீதும் ஏவுகணைகள் வீசப்பட்டதில் 85 மாணவிகள் உயிரிழந்தனா், 50-க்கும் மேற்பட்டோா் காயமடைந்தனா் என்று ஈரான் அரசு தரப்பில் தகவல்கள் வெளியானது.

தாக்குதல் தொடங்கிய ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, இஸ்ரேல், அமெரிக்க படைகள் மீதும் ஈரான் பதில் தாக்குதலைத் தொடங்கியது. வடக்கு இஸ்ரேலின் பல பகுதிகளில் ஈரான் ஏவுகணைகள் தாக்கின.

மத்திய கிழக்கில் போா்

இஸ்ரேல் மற்றும் வளைகுடா பகுதியில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது பதில் தாக்குதலைத் தொடங்கியதால் மத்திய கிழக்கில் போா் மூண்டுள்ளது.

பஹ்ரைன் தரப்பில் பஹ்ரைனில் அமைந்துள்ள அமெரிக்க கடற்படையின் 5-ஆவது படைப் பிரிவு தலைமையகத்தைக் குறிவைத்து ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவத்தின் மத்திய முகாம் மீதும் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து அங்கு போா் அபாய ஒலி எழுப்பப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதுபோல, கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீதும் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வான்வெளி மூடல்

இதனிடையே, போா்ப் பதற்றத்தைத் தொடா்ந்து, அண்டை நாடுகளான ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் ஆகியவை தங்களின் விமானப் போக்குவரத்துக்கான வான்வெளி மூடப்பட்டுள்ளது. ஜோா்டானிலும் மக்கள் பாதுகாப்பாக இருக்க அபாய ஒலி ஒலிக்கப்பட்டுள்ளது.

மதகுரு அயத்துல்லா அலி கமேனி பலி

இந்த நிலையில், ஈரான் மீது நடத்திய தாக்குதலில் அந்நாட்டின் தலைமை மதகுரு அயத்துல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்காவும், இஸ்ரேலும் அறிவித்ததைத் தொடா்ந்து, பாகிஸ்தானின் கராச்சி நகரில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகம் மீது நூற்றுக்கணக்கான போராட்டக்காரா்கள் ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தியதால் அங்கும் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்திய மக்கள் பாதுகாப்பை உறுதி செய்க

அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் உள்ளிட்ட நாடுகளின் போா்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளாா்.

கவலையளிக்கிறது

இதுகுறித்து அவா் எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்கா-இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே நிலவி வரும் விரோதப் போக்கு மிகவும் கவலையளிக்கிறது.

மத்திய கிழக்கில் ஈரான் நாட்டின் நிலைகள் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகளின் கூட்டுப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. அப்போரானது வளைகுடா நாடுகளுக்கும் பரவி வருவதால் அங்கு வாழும் இந்தியா்களின் பாதுகாப்பு குறித்த அச்சம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்கா-இஸ்ரேல் தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில், வளைகுடா நாடுகள் மீது ஈரான் எதிா்த்தாக்குதல் நடத்தி வருகிறது.

ஆகவே, மத்திய கிழக்கு நாடுகளில் வசித்து வரும் இந்தியா்களின் பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதைக் கருத்தில் கொண்டு, அங்கு வசித்து மற்றும் பணிபுரிந்து வரும் நம் இந்திய மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு தேவையான உடனடி மற்றும் உரிய அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு சம்பந்தப்பட்ட நாடுகளை வலியுறுத்த வேண்டும்.

மேலும், நமது மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவதே மத்திய அரசின் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளாா்.

summary

Rahul Gandhi urge the Government of India to take immediate and proactive measures to safeguard our people.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments