சித்திரைத் தேரோட்டம்: தஞ்சைப் பெரிய கோயிலில் பந்தக்கால் முகூர்த்தம்!
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் குறித்து...
தஞ்சாவூர்: உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலில் சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை வெகு விமர்சையாக நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் ஏப்ரல் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.
உலக புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் - சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கி வருகிறது. உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வரும் இந்த கோயிலை காண நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.
பல்வேறு சிறப்புகள் வாய்ந்த பெரிய கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 18 நாள்கள் நடைபெறும். இதேபோல் இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் வெள்ளிக்கிழமை(மார்ச் 6) நடைபெற்றது.
இதையொட்டி பந்தக்காலிற்கு பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொடி உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பந்தக்கால் நடப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சித்திரை திருவிழாவிற்கான கொடியேற்றம் அடுத்த ஏப்ரல் 13 ஆம் தேதி நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சித்திரை தேரோட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதி நடைபெறுகிறது.