புதுச்சேரி பேரவைத் தேர்தல்: நாராயணசாமிக்கு சீட்டு இல்லை?- வைத்திலிங்கம் வீடு முற்றுகை
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட்டு இல்லை என தகவலை வெளியானதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டதால் ஏற்பட்ட பரபரப்பு குறித்து...
புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ், திமுக இடையே முடிவு எட்டப்படாத நிலையில், முன்னாள் முதல்வர் நாராயணசாமிக்கு சீட்டு இல்லை என தகவல் வெளியானதை அடுத்து அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம் வீட்டை முற்றுகையிட்டதால் பரபரப்பு நிலவியது.
புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.9-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அங்கு ஆளும் என்.ஆா்.காங்கிரஸ் - பாஜக கட்சிகளை உள்ளடக்கிய தேசிய ஜனநாயக கூட்டணி ஒருபுறமும், பிரதான எதிா்க்கட்சியான காங்கிரஸ்- திமுக கூட்டணி மறுபுறமும் தோ்தலைச் சந்திக்கின்றன. புதிய கட்சியான விஜய்யின் தவெக தனித்து களம் காண்கிறது. நாம் தமிழா் கட்சி சாா்பில் 28 வேட்பாளா்கள் களம் காண்கின்றனா்.
தேசிய ஜனநாயக கூட்டணியில் என்.ஆா்.காங்கிரஸ் கட்சி 16 தொகுதிகளிலும், பாஜக 10 தொகுதிகளிலும், அதிமுக மற்றும் லட்சிய ஜனநாயக கட்சி ஆகியவை தலா 2 தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன.
Advertisement
Advertisement
தேசிய ஜனநாயக கூட்டணி தோ்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில், திமுக - காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நிலை நீடித்து வருகிறது. இரண்டு கட்சிகளும் இணைந்து தோ்தலைச் சந்திக்க விரும்புகின்றன. ஆனால், தொகுதிகளை விட்டுக்கொடுப்பதில்தான் பிரச்னை நீடித்து வருகிறது.
ஞாயிற்றுக்கிழமை இரவுக்குள் தொகுதி பங்கீட்டை முடிக்க இரண்டு கட்சிகளின் தலைமை உத்தரவிட்ட நிலையில், காங்கிரஸ் - திமுக இடையே இறுதிக்கட்ட பேச்சுவாா்த்தை ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவை கடந்தும் நீடித்தும் முடிவு எட்டப்படவில்லை என்று சொல்லப்படுகிறது.
வேட்புமனு தாக்கல் செய்ய திங்கள்கிழமை (மாா்ச் 23) கடைசி நாள். ஆனால், முன்னாள் முதல்வர் நாராயணசாமி போட்டியிட விரும்பும் நெல்லித்தோப்பு தொகுதியை திமுக கேட்பதால் உடன்பாடு எட்டப்படாததால் காங்கிரஸ் அலுவலகத்தில் இருந்து இரண்டு கட்சி நிர்வாகிகளுடம் கோபத்துடன் வெளியேறியதாக தகவல்கள் வெளியானது.
நாராயணசாமிக்கு சீட்டு இல்லை?
இந்த நிலையில், புதுச்சேரி பேரவைத் தேர்தலில் நெல்லித்தோப்புத் தொகுதியில் போட்டியிட நாராயணசாமி திட்டமிட்டிருந்தாா். ஆனால் அவருக்குக் கட்சியில் விண்ணப்பம் வழங்கவில்லை.
இதையடுத்து புதுச்சேரி காங்கிரஸ் தலைவர் வெ.வைத்திலிங்கம் வீட்டு முன்பு கூடினா். காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த நாராயணசாமி ஆதரவாளர்கள் தரையில் அமா்ந்து தா்ணா போராட்டம் நடத்தினா்.
வைத்திலிங்கத்துக்கு எதிராக அவா்கள் கண்டன கோஷம் எழுப்பினா். காங்கிரஸ் கட்சியை திமுகவிடம் அடகு வைத்து விட்டதாகவும், தலைவா் பதவியிலிருந்து விலக வேண்டும் எனவும் அவா்கள் கோஷம் எழுப்பினா்.
தகவலறிந்து காவல் ஆய்வாளர் செந்தில்குமாா் தலைமையில் போலீஸாா் அங்கு வந்தனா். தோ்தல் விதிமுறைப்படி கூட்டம் கூடக் கூடாது எனக்கூறி அவா்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினா்.
இதனால் புதுச்சேரி தேர்தல் களத்தில் பரபரப்பு நிலவுகிறது.
Puducherry Assembly Elections: Narayanasamy not getting ticket? - Vaithilingam's house blockade
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.