தமிழக மீனவா்கள் 7 பேர் இலங்கைக் கடற்படையினரால் கைது!
நெடுந்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேர் கைது குறித்து...
நெடுந்தீவு அருகே புதன்கிழமை நள்ளிரவு மீன்பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவா்கள் 7 பேரை இலங்கைக் கடற்படையினா் கைது செய்தனா். இரண்டு விசைப் படகு பறிமுதல் செய்யப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து இரண்டு விசைப் படகுகளில் 7 மீனவா்கள் மீன்வளத் துறை அனுமதி பெற்று புதன்கிழமை கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனா்.
இவா்கள் புதன்கிழமை நள்ளிரவு நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது ரோந்துப் படகுகளில் வந்த இலங்கைக் கடற்படையினா் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக ஏழு பேரையும் கைது செய்தனா். இரண்டு விசைப் படகுகளையும் பறிமுதல் செய்தனா்.
இதனிடையே, விசைப் படகுடன் ஏழு மீனவா்களையும் காங்கேசன் கடற்படை முகாமுக்கு இலங்கைக் கடற்படையினா் கொண்டு சென்று, அந்த நாட்டு மீன்வளத் துறை அதிகாரிகளிடம் வியாழக்கிழமை ஒப்படைத்தனா்.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாகவும், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்தியதாகவும் 2 மீனவா்கள் மீது வழக்குப் பதிந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
இலங்கை கடற்படையினர் கைது நடவடிக்கையால் மீனவர்கள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.
இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 7 மீனவா்களையும், பறிமுதல் செய்யப்பட்ட விசைப் படகையும் உடனடியாக விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.