புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: குற்றவாளிக்கு தூக்கு தண்டனை!
புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிக்கு தூக்கு தண்டனை குறித்து...
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில், உயிருடன் எஞ்சியுள்ள ஒரே குற்றவாளியான கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி முத்தியால்பேட்டையில் கடந்த 2024 -ஆம் ஆண்டு வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 9 வயது சிறுமி கடத்திச் சொல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்து, அதே பகுதியில் கழிவுநீர் வாய்க்காலில் கை,கால்கள் கட்டப்பட்ட நிலையில் சாக்கு பையில் கட்டி வீசப்பட்டு கிடந்தார்.
நாடு தழுவிய அளவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், இந்த கொடூர செயலில் ஈடுபட்டது சோலை நகர், அம்பேத்கர் நகர் 2 ஆவது குறுக்குத் தெரு முனுசாமி மகன் கருணா(எ)கருணாஸ்(20) என்ற இளைஞர் மற்றும் முத்தியால்பேட்டை விவேகானந்தன்(56) என்ற முதியவர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.
Advertisement
இருவரும் சிறையில் இருந்த நிலையில் முதியவரான விவேகானந்தன் சிறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். எஞ்சியுள்ள ஒரே குற்றவாளியான கருணாஸ் உயிரோடு இருக்கும் நிலையில் இந்த வழக்கு புதுச்சேரி போக்சோ விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
சுமார் இரண்டு ஆண்டுகள் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணைகள் முடிவடைந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த ஏப்ரல் மாதம் 30 தேதி கருணாவை குற்றவாளி என அறிவித்து நீதிபதி எம்.டி. சுமதி தீர்ப்பு வழங்கினார். தண்டனை விவரம் மே 5 ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.
இந்த நிலையில், குற்றவாளி கருணாஸுக்கான தண்டனை வெள்ளிக்கிழமை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, வெள்ளிக்கிழமை(மே 8) தீர்ப்பு வழங்க வந்த போக்சோ விரைவு நீதிமன்றம் நீதிபதி சுமதி, குற்றவாளி கருணாவிடம் இறுதி விசாரணை நடத்தினார்.
விசாரணை முடிவில் குற்றவாளி கருணாஸுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிபதி சுமதி உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டார்.
புதுச்சேரியை உலுக்கிய இந்த வழக்கில் குற்றவாளிக்கு ஆதரவாக புதுச்சேரியை சேர்ந்த வழக்குரைஞர்கள் யாரும் ஆஜராகாத நிலையில் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வழக்குரைஞர்கள் இந்த வழக்கில் ஆஜரானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.