தமிழக முதல்வர் விஜய்க்கு பாமக ராமதாஸ் வாழ்த்து!
தமிழக முதல்வராகப் பதவியேற்ற தவெக தலைவர் ச.ஜோசப் விஜய்க்கு ச.ராமதாஸ் வாழ்த்து குறித்து...
தமிழக முதல்வராகப் பதவியேற்ற தவெக தலைவர் ச.ஜோசப் விஜய்க்கு பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ச.ராமதாஸ் மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,
தமிழகத்தில் 17-ஆவது சட்டப்பேரவையின் முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜோசப் விஜய்க்கும் அவரது அமைச்சரவையில் அங்கம் பெற்றுள்ள அமைச்சர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
Advertisement
ஜோசப் விஜய் தலைமையில் அமைந்துள்ள புதிய தமிழக அரசு, தமிழக மக்களின் நலனையும், சமூக நீதியையும், வளர்ச்சியையும் முன்னிறுத்தி சிறப்பான ஆட்சியை வழங்குவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த புதிய அரசு மக்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நல்லாட்சியை வழங்க வேண்டும்.
மேலும் தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக அனைத்து தரப்பினரையும் இணைத்து செயல்பட்டு வெற்றிகரமான நிர்வாகத்தை வழங்க வாழ்த்துகள். பதவி ஏற்ற உடன் 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கவும், போதை ஒழிப்புக்கு சிறப்பு படை உருவாக்கவும் முதல் கையொப்பம் இட்டமையை வரவேற்று எனது நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது போல் சாதிவாரி கணக்கெடுப்பை உடனே நடத்திட வேண்டும். அவற்றை கொண்டு உரிய சமூகங்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்கிட வழிவகை செய்ய வேண்டும்.
ஜோசப் விஜய்க்கு பெரும்பாலும் இளைஞர்களும், மகளிர்களும் வாக்களித்து உள்ளனர். அவர்களின் நலன் கருதி தமிழகத்தில் முழு மது விலக்கை கொண்டு வர வேண்டும் மற்றும் போதை வஸ்துகள் இல்லாமல் செய்ய வேண்டும். இதை இந்த ஆட்சியில் ஜோசப் விஜய் தலைமையிலான அரசு செய்ய வேண்டும் என ராமதாஸ் கோரிக்கை வைத்துள்ளார்.