பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? - கி.வீரமணி கேள்வி
முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? என கி.வீரமணி கேள்வி எழுப்பியிருப்பது குறித்து...
முதல்வர் பதவி ஏற்பு விழாவில் பண்பாட்டுப் படையெடுப்பின் தொடக்கமா? என கேள்வி எழுப்பியுள்ள திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழ்நாட்டின் மீது மீண்டும் ஹிந்தி, சமஸ்கிருத ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பண்பாட்டின் ஆதிக்கம் தொடங்கி உள்ளதற்கு நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் என கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில்,
தமிழ்நாடு அரசின் புதிய முதல்வருக்கு நமது சுட்டிக்காட்டல்!
Advertisement
Advertisement
முதல்வர் ஜோசப் விஜய் பதவியேற்பு விழாவில், இதற்கு முன் எப்போதும் நடந்திராத "திடீர் மாற்றம்" - விழாவின் தொடக்கத்திலேயே நடைபெற்றதோடு, விழா முடிவிலும் அதைக் காண முடிந்தது. தமிழ்நாட்டின்மீது மீண்டும் ஹிந்தி, சமஸ்கிருத ஆர்.எஸ்.எஸ். கொள்கைப் பண்பாட்டின் ஆதிக்கம் தொடங்கி உள்ளது.
நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம்!
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கு, குறிப்பாக முதல்வர் ஜோசப் விஜய்க்கு சுட்டிக்காட்டி (அதுவும் பதவியேற்ற அன்றே) நமது கண்டனத்தைப் பதிவு செய்யவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
‘வந்தே மாதரம்’ பாடல் சமஸ்கிருத, ஹிந்தி மொழிப் படையெடுப்பின் படையெடுப்பு ஆகும். (சமஸ்கிருத மயப்படுத்தப்பட்ட பாட்டு)
அதைவிட, ‘வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதைப்போல’,நம் மொழி செம்மொழித் தமிழ் வாழ்த்தாம் "நீராரும் கடலுடுத்த" பாடல் மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டதைப் பார்த்து, தமிழ் உணர்வாளர்களின் நெஞ்சம் கொதிக்கிறது! இதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்!
"மரபுகள் மாற்றப்பட்டதுதானா இவர்களால் சொல்லப்பட்ட மாற்றம்?" என்ற கேள்வி, தமிழ்நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கிவிட்டது. இது எப்படி? ஏன்? ஏற்பட்டது என்பதை முதல்வர் ஓர் அவசர விசாரணை நடத்தி, அதுபோன்ற அவலங்கள் மீண்டும் தொடராது இருக்க வழிவகை காணவேண்டும்!
கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும்!
விழா ஏற்பாட்டாளர்கள் யார்? ‘லோக் பவன்’என்ற ஆளுநர் மாளிகையா? அல்லது தமிழ்நாடு அரசின் பொதுத் துறையா? என்பதை விசாரித்து, நேரிடையாகவோ, மறைமுகமாகவோ தமிழ்நாட்டு மக்களின் உணர்வுக்கு எதிரான இத்தகைய பண்பாட்டு படையெடுப்பு மீண்டும் அரசு நிகழ்ச்சிகளில் ஏற்படாது – கவனச்சிதறல் இன்றி செயல்படவேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Regarding K. Veeramani raising the question-"Does the Chief Minister's swearing-in ceremony mark the beginning of a cultural invasion?"-...
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.