கோடையில் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படுவது ஏன்?
கோடைக் காலத்தில் பொடுகுத் தொல்லை ஏன் அதிகம் ஏற்படுகிறது என்பது பற்றி...
தலையில் பொடுகுத் தொல்லையால் அரிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. சாதாரணமாக குளிர் காலத்தில்தான் பொடுகுத் தொல்லை அதிகம் ஏற்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால் கோடை காலத்திலும் அதிக வெய்யில் காரணமாக வியர்வை, அழுக்கு சேர்ந்து அரிப்பு, பொடுகுத் தொல்லை ஏற்படும். கோடை காலத்தில் இதன் விளைவுகள் அதிகமாக இருக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
உடலில் அதிகமாக வெய்யில் படும்போது உச்சந்தலையில் அதிகப்படியான வியர்வையை ஏற்படுத்துகிறது. வியர்வையானது எண்ணெய் மற்றும் அழுக்குடன் கலக்கும்போது அது தேங்கி, சருமத் துளைகள் அடைபடுவதற்கும் எரிச்சலுக்கும் வழிவகுக்கிறது. தலை ஈரப்பதமாக இருப்பது பொடுகு ஏற்பட வழிவகுக்குகிறது.
Advertisement
வியர்வை ஈரப்பதம், பொடுகை உண்டாக்கும் பூஞ்சைகளை உருவாக்குகின்றன. இதில் எண்ணெய் சேரும்போது பொடுகு போன்ற செதில்கள் உண்டாகின்றன.
அதிக வெப்பநிலை நமது உடல் மேற்பரப்பில் எண்ணெய்களின் உற்பத்தியையும் அதிகரிக்கிறது. இதனாலும் பொடுகு ஏற்படும்.
பொடுகுத் தொல்லை ஏற்பட்டால் தலைமுடியை அதிகமாக கழுவுவதும் கூடாது, அதேநேரத்தில் கழுவாமாக இருக்கவும் கூடாது. இரண்டுமே பிரச்னைகளை ஏற்படுத்தும்.
மக்கள் தங்கள் தலைமுடியை அடிக்கடி கழுவுவதால் அதன் இயற்கையான எண்ணெய்ப் பசை நீங்கி பிரச்னையை உண்டாக்கும். சிலர் தலைமுடியைக் கழுவுவதே இல்லை, இதனால் அழுக்கும் வியர்வையும் சேர்ந்து பொடுகை அதிகப்படுத்தும்.
லேசான அரிப்பு, உச்சந்தலையில் பிசுபிசுப்பு, தலைமுடியின் வேர்க்கால்களில் சிவந்து காணப்படுவது போன்ற அறிகுறிகளை யாரும் பெரிதாக. எடுத்துக்கொள்வதில்லை. இவை பொடுகாக மோசமடைவதற்கு முன்பு கவனிக்கப்பட வேண்டியவை ஆகும்.
ஆரம்பத்திலேயே இதனைக் கவனித்து தலைமுடியையும் வேர்க்கால்களையும் சுத்தம் செய்வது அவசியமாகும். அதிக ரசாயனம் மிகுந்த ஷாம்பூ உள்ளிட்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். உடலின் வெப்பத்தையும் சமநிலையில் வைத்திருக்க வேண்டும்.
தலையில் அழுக்கு சேராதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். வெங்காயச் சாறு, வெந்தயம், கற்றாழை என தலைமுடியைப் பராமரிக்கக்கூடிய அவரவர்க்கு ஏற்ற பொருள்களைப் பயன்படுத்தலாம்.
பொடுகு பாதிப்பு அதிகம் இருந்தால் நிபுணரை அணுகி ஆலோசிப்பது நல்லது.
[பொறுப்புத் துறப்பு: இந்தச் செய்திகள் / தகவல்கள் மருத்துவ நூல்கள், இணைய தளங்கள், அனுபவப் பகிர்வுகள் அடிப்படையில் தொகுத்துத் தரப்படுகிற பொதுவான ஆலோசனைகள் மட்டுமே. எந்தவொன்றையும் செயல்படுத்தும் முன் உரிய மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவதே நல்லது. எந்த விதத்திலும் ‘தினமணி’ பொறுப்பாகாது.]