முன்பு பானிபூரி; தற்போது ஷவர்மா: அதிர்ச்சியளிக்கும் உணவுத் தரம்!
சாலையோர துரித உணவுகள் தரம் குறித்த தொடர் விமர்சனங்கள் எழுந்துவரும் நிலையில் அதிகாரிகள் ஆய்வில் தகவல்
கர்நாடகத்தின் உணவு தரக் கட்டுப்பாட்டு (எஃப்எஸ்எஸ்ஏஐ) அதிகாரிகள் மாநிலம் முழுவதுமிருந்து சேகரித்த உணவு மாதிரிகளில் அதிர்ச்சி தரும் முடிவுகள் வெளியாகியுள்ளன.
பெங்களூரு மாநகரம் உள்பட 10 மாவட்டங்களில் பெறப்பட்ட ஷவர்மா மாதிரிகளில் உணவுத் தரம் மோசமாக இருப்பதாகவும் உடல் நலனுக்கு தீங்கிழைப்பதாக உள்ளதாகவும் அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
பெறப்பட்ட 17 மாதிரிகளில், 8 மாதிரிகள் சுகாதாரமற்ற நிலையில் இருந்ததாகவும் உடலுக்கு தீங்கிழைக்கும் ஆரோக்கியமற்ற கிருமிகள் மற்றும் ஈஸ்ட் அந்த மாதிரிகள் கண்டறியப்பட்டுள்ளன.
Advertisement
கடந்த வாரம் மாநிலத்தில் சேகரிக்கப்பட்ட பானி பூரி மாதிரிகளில் 22 சதவிகிதம் பாதுகாப்பற்று இருந்ததை உணவுத் தர அதிகாரிகள் கண்டறிந்தனர். மாநிலம் முழுவதும் செயற்கை நிறமூட்டிகள் தடை செய்யப்பட்டதையடுத்து கவனம் ஷவர்மா மீது திரும்பியுள்ளது.
பிரில்லியண்ட் ப்ளூ, சன்செட் யெல்லோ, டார்ட்ராசைன் மற்றும் ரோடோமைன் -பி உள்ளிட்ட பல நிறமூட்டிகளுக்கு கர்நாடக அரசு தடை விதித்தது. இந்த செயற்கை நிறமூட்டிகள் மனிதர்களுக்கு வயிற்றுக்கோளாறு, இதய நோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை ஏற்படுத்தக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
பிரில்லியண்ட் ப்ளூ அதிகப்படியாக எடுத்துக்கொள்வது தோல் அரிப்பு உள்ளிட்ட அலர்ஜியை ஏற்படுத்தும். குழந்தைகளுக்கு தீங்கிழைக்கும் இந்த செயற்கை பொருள்களால் அவர்கள் ஏடிஹெச்டி உள்ளிட்ட அதீதசெயல்பாட்டு குறைப்பாட்டுக்கு ஆளாவர் எனவும் எச்சரிக்கப்படுகிறது.
செயற்கை நிறமூட்டிகளை பயன்படுத்தும் உணவகங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாநில சுகாதார அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் தெரிவித்துள்ளார்.