கொலை வழக்கை விபத்தாக மாற்றிய போலீஸார்: உள்துறைச் செயலர், டி.ஜி.பி. பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு
கும்பலால் தாக்கப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவத்தை, போலீஸார் முதல் தகவல் அறிக்கையைத் திருத்தி விபத்து
கும்பலால் தாக்கப்பட்டு பெண் உயிரிழந்த சம்பவத்தை, போலீஸார் முதல் தகவல் அறிக்கையைத் திருத்தி விபத்து வழக்காக மாற்றியதாகத் தொடரப்பட்ட வழக்கில் உள்துறைச் செயலர், டி.ஜி.பி. ஆகியோர் பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியைச் சேர்ந்த சிட்டு என்பவர் தாக்கல் செய்த மனு:
நான் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவள். எனக்கு 4 மகள்கள் உள்ளனர். எனது தங்கை முருகவள்ளி (30), செவிலியராகப் பணியாற்றி வந்தார். அவருக்கு பெண் குழந்தை உள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் எனது தங்கை எனது வீட்டுக்கு வந்திருந்தார்.
Advertisement
அப்போது, பிப்ரவரி 22 இல் ஆதிக்க ஜாதியைச் சேர்ந்த சிலர் கலப்பு திருமண பிரச்னை தொடர்பாக, வீதியில் ரகளை செய்து வந்தனர்.
அப்போது, எனது வீட்டு முன்பாக பாத்திரம் கழுவிக் கொண்டிருந்த எனது தங்கை மீது கற்களால் தாக்கினர். இதில், படுகாயமடைந்த முருகவள்ளி, ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடரபாக, சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். சில நாள்களுக்குப் பிறகு, சாயல்குடி போலீஸார் மருத்துவமனையில் இருந்து வெளியேறுமாறு கட்டாயப்படுத்தினர். இதனால், முருகவள்ளியை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றோம். ஆனால், அங்கு அவர் ஏப்ரல் 12 இல் உயிரிழந்தார்.
சாயல்குடி போலீஸார் நான் ஏற்கெனவே அளித்த புகார் அடிப்படையில் பதிவான கொலை முயற்சி வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் திருத்தம் செய்துள்ளனர். முருகவள்ளி குளியலறையில் விழுந்து காயம் அடைந்ததாக, அதில் குறிப்பிட்டிருந்தனர்.
எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு மாற்றவேண்டும். மேலும், எனது தங்கை சாவுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி என். கிருபாகரன், இந்த மனுவுக்கு 8 நாள்களில் பதிலளிக்குமாறு, டி.ஜி.பி., உள்துறைச் செயலர், ராமநாதபுரம் எஸ்.பி., சிபிசிஐடி மதுரை எஸ்.பி., சாயல்குடி இன்ஸ்பெக்டர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார். வரும் 29 ஆம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.