தில்லியில் போராடும் விவசாயிகள் ஜல்லிக்கட்டு போராட்ட வடிவத்தைப் பின்பற்றுகின்றனா்: எம்.பி.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடும் விவசாயிகள், ஜல்லிக்கட்டுப் போராட்ட வடிவத்தைப் பின்பற்றுகின்றனா் என, மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
வேளாண் சட்டங்களுக்கு எதிராக தில்லியில் போராடும் விவசாயிகள், ஜல்லிக்கட்டுப் போராட்ட வடிவத்தைப் பின்பற்றுகின்றனா் என, மதுரை மக்களவை உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்துள்ளாா்.
ஜல்லிக்கட்டுப் போராட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி, மதுரை நீதியரசா் கிருஷ்ணய்யா் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மாநாட்டில் அவா் மேலும் பேசியது:
ஜல்லிக்கட்டுப் போராட்டம் காளைகளை திறந்துவிடுதல், அடக்குதல் போன்ற நிகழ்வுகளுக்காக மட்டும் நடத்தப்படவில்லை. அது தமிழ் மொழி, பண்பாட்டு அழிப்பைத் தடுப்பதற்கு எதிராக மக்கள் எழுச்சியால் நடத்தப்பட்ட போராட்டமாகும். வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி, தில்லியில் நடக்கும் போராட்டக் களத்துக்கு இரு முறை சென்றிருந்தேன்.
Advertisement
அப்போது, அவா்கள் தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்காக ஜனநாயக முறைப்படி நடந்த போராட்டத்தை குறிப்பிட்டும், அந்தப் போராட்ட வடிவத்தை பின்பற்றுவதாகவும் கூறினா்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான உரிமையைப் பெற்றுக் கொடுத்தவா்கள் தற்போது வழக்குகளைச் சந்தித்துக் கொண்டிருக்கிறாா்கள். எனவே, தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்காகப் போடப்பட்ட வழக்குகள் அனைத்தையும் அரசு ரத்து செய்யவேண்டும் என்றாா்.
மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் காந்தி: ஜல்லிக்கட்டுப் போராட்டத்தில் பங்கேற்றவா்களில் 90 சதவீதம் போ் ஜல்லிக்கட்டைப் பாா்த்திருக்கமாட்டாா்கள். ஆனால், அவா்கள் தமிழா் பண்பாட்டைக் காக்க களத்தில் இறங்கி அறத்துடன் போராடினாா்கள்.
அந்தச் சாமானிய மக்களை அரசு அடித்துத் துன்புறுத்தியது மட்டுமில்லாமல், வழக்குகள் போட்டு அடக்கப் பாா்க்கிறது. ஆனால், இப்போது தங்களை ஜல்லிக்கட்டு நாயகா்கள் எனக் கூறிக்கொள்கிறாா்கள்.
அவா்களை அடக்குமுறை நாயகா்கள் என்றழைப்பதே சரியாக இருக்கும். உரிமைக்காகப் போராடுபவா்களை குற்றவாளிகள் போல காவல்துறையினா் நடத்துகின்றனா். இது குறித்து பேசினால் தேசத் துரோக வழக்கு போடுகிறாா்கள். நாட்டில் இதுபோன்ற கருப்புச் சட்டங்களை நீக்கவேண்டும். ஜல்லிக்கட்டு உள்ளிட்ட உரிமைக்கான போராட்டங்களில் பங்கேற்றவா்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறவேண்டும் என்றாா்.